21ம் நூற்றாண்டில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுவது சமூக வலைதளங்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து மக்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது சமூக வலைதளங்கள். வெளியில் தெரியாத அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துரைக்கவும், நல்ல விஷயங்களை அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த சமூக வலைதளங்களின் மிகவும் முக்கியமான நோக்கமாக உள்ளது.

Continues below advertisement

வன்மங்களை பரப்பும் தளமாக மாறும் வலைதளங்கள்:

ட்விட்டர் எனப்படும் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களே இன்று உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வலைதளங்களாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த வலைதளங்களை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்கள் வன்மங்களை பரப்பும் தளமாக மாறி வருகிறது. குறிப்பாக, பிரபலங்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சிப்பதற்குமே தற்போது அதிகளவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

தனிநபர் தாக்குதல்:

நேற்று முதல் எக்ஸ் தளத்தில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்தையும், விஜய்யையும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் ஒருவரை ஒருவர் மாறி, மாறி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். முகம் சுளிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளாலும், வீடியோக்களாலும் விமர்சனங்களை மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர்.

நடிகர்கள் மட்டுமின்றி ஏதாவது ஒரு நிகழ்வு அரங்கேறும்போது அந்த நிகழ்வுக்கு தொடர்பான நபர்களை பாராட்டி சிலரும், அவர்களை சரமாரியாக விமர்சித்து சிலரும் கருத்துக்களையும், மீம்ஸ்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். எந்தவொரு செயலையும் அடுத்தவர் மனம் புண்படாத வகையில் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால், முகம் சுளிக்கும் வகையிலும், தரக்குறைவாக பேசவோ யாருக்கும் உரிமை இல்லை.

ஆரோக்கியமற்ற போக்கு:

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் குறிப்பாக எக்ஸ் தளத்தில் மிக மோசமான கருத்துக்களை, தனிநபர் மீதான தாக்குதலை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற கருத்துக்கள் வளரும் சமுதாயத்தினரை தவறான பாதையில் வழிநடத்தும் வகையில் அமைகிறது. சில விஷமிகள் தனிநபர்கள் தாக்குதலை நடத்தி வீண் பதற்றத்தையும், நேர விரயத்தையும், ஒரு நபரின் மீதான மதிப்பை குறைக்கும் செயலையும் செய்து வருகின்றனர்.

நல்ல ஆரோக்கியமான விஷயங்களை அடுத்தவரிடத்தில் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்களின் அடிப்படை நோக்கத்திற்கு நேர் எதிராக ஒரு தனிப்பட்ட நபரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்திற்காகவே தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கும், இளைஞர்களின் மனநலனுக்கும் இது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், இதுபோன்ற செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்த செயலை தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும், சமூக வலைதளங்களும் இதுபோன்ற அவதூறு பரப்புபவர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும். ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு சமூக வலைதளங்களும் ஆரோக்கியமான பாதையில் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க: EPS Statement: ”பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கிடுக; கரும்பு நேரடி கொள்முதல்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மேலும் படிக்க: Jallikattu 2024 Date: ஓரம்போ... ஓரம்போ... வருகிறது ஜல்லிக்கட்டு போட்டி - எங்கே? எப்போது? தேதிகள் அறிவிப்பு