நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், "மெமரீஸ்".சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரவைக்கும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட  படங்களில் நாயகனாக வந்த வெற்றி மெமரீஸ் படத்திலும் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். ‘சூது கவ்வும், டிமாண்டி காலணி’ புகழ் ரமேஷ் திலக் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 


பத்திரிகையாளர்கள் சந்திப்பு:


சென்னையில் இன்று நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியபோது, இப்படம் எனது இரண்டாவது படம். இப்படம் சீட் எட்ஜ் திரில்லர். நாங்கள் எல்லோரும் புதியவர்கள், மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்




இந்நிகழ்ச்சியின் போது பேசிய எழுத்தாளர் விபின் கிருஷ்ணா” இது எனது முதல் மேடை. இந்த மேடைக்காக எங்கள் டீம் பல நாள் காத்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு வந்த பல தடைகளைத் தாண்டி இப்படம் முடிய எங்கள் தயாரிப்பாளர் ஷிஜு தமீன் தான் காரணம். அவருக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “நாயகன் வெற்றி தேர்ந்தெடுத்த எந்த கதையும் சோடை போகாது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு நன்றி. ஷ்யாம் பல கால நண்பர் பல வருடங்களாக இணைந்து வேலை பார்த்து வருகிறோம்.” என்றார்


நாயகன் வெற்றி, “எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன். ஆனால் நான் தான் வேண்டும் என காத்திருந்து இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்,  கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள்” என்று கூறினார்.




இயக்குநர் ப்ரவீன் பேசிய போது, “மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்” என்று கூறினார்.


இயக்குநர் ஷியாம் பேசியதாவது, “நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன்.  இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.