குணச்சித்திரம் , நகைச்சுவை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்தலாக நடிப்பவர் நடிகர் மயில்சாமி. இந்நிலையில் நண்பர் ஒருவர் வீட்டில் நடைப்பெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார் மயில்சாமி. அங்கு மணமக்களுக்கு பெட்ரோலை திருமண பரிசாக கொடுத்துள்ளார்.   பெட்ரோல்  நிறம்பிய அந்த கேனை  மணமக்களுக்கு கொடுக்கும்பொழுது அதனை  சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்கின்றனர் மணமக்கள். இதனை  திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ரசித்து பார்த்து அரங்கமே சிரிப்பலையில் மூழ்கிப்போனதாம்.


மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து மயில்சாமி கூறுகையில், “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. அதனை நினைவுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியான பரிசை அளித்தேன். பொதுமக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கூறிய அவர், தமிழக அரசு 3 ரூபாய்  பெட்ரோல் விலை குறைத்திருப்பதை வரவேற்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். 




முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன்  இருந்தபொழுது அ.தி.மு.க ஆதரவாளராக இருந்தவர் மயில்சாமி. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துநின்று போட்டியிட்டார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமி தோல்வியடைந்தார். அவருக்கு வெறும் 1,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்த தோல்வி குறித்து அவர் கூறுகையில் ”தேமுதிகவிற்கு நிகரான வாக்குகளை நான் பெற்றிருக்கிறேன். எனக்கு வாக்களுத்த 1,435 பேரும் மாற்றத்தை விரும்புவர்கள். மேலும் அவர்களுக்கு நான் எந்த பணமும் கொடுக்கவில்லை. அந்த ஓட்டுகள் அத்தனையும் எதிர்ப்பு ஓட்டுகள். வருகிற புதிய அரசாங்கம்  மக்களை எப்படிப் பார்த்துக்கொள்கிறது என்பதைப் பொறுத்துதான் நான் அடுத்தமுறை போட்டியிடுவது குறித்து தெரியவரும்.. இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்தால் நாம் ஏன் போட்டியிட வேண்டும். நமக்கும் தனிப்பட்ட வேலைகள் நிறைய இருக்கிறதல்லவா!?” என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமலின் நண்பனாக நடித்திருந்திருந்தார். ஆரம்பத்தில் கூட்டத்தில் நடிக்கும் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து இன்று பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் வெர்சட்டைல் நடிகராக மாறி தனது நடிப்பின் மூலம் மக்களை மகிழ்வித்து வருபவர் மயில்சாமி.


சமீபத்தில் ஓடிடி தளம் ஒன்றில்  வெளியான ‘மலேசியா டூ அம்னீசியா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் , தயாரித்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மயில்சாமி. சமீபத்தில் கோட் ஷூட் போட்டு இவர் எடுத்திருந்த புகைப்படம் இணையத்தை கலக்கின. அந்த புகைப்படத்தில் குடை ஒன்றை வைத்துக்கொண்டு மாஸாக போஸ் கொடுத்திருந்தார் மயில்சாமி. சமீப காலமாக நடிகர்கள் பலரும் இவ்வகையான ஃபோட்டோ ஷூட்டில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.