கடந்த 2009 ஆம் ஆண்டு UnitedArts நிறுவனம், மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் எழுத்து இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மாயாண்டி குடும்பத்தார். குடும்பக்கதையையும் பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்த படம், பார்ப்பவர்களை கண்ணீரில் மூழ்கடித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திற்கு 2010ஆம் ஆண்டும் தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசும் கிடைக்கப்பெற்றது. இயக்குநர் ராசு மதுரவன் கடந்த 2013ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழந்தார். இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 


தற்போது, அதே நிறுவனம் மாயாண்டி குடும்பத்தார்-2" என்ற படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் கே.பி. ஜெகன். இவர் ஏற்கனவே விஜய் நடித்த புதிய கீதை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  முதல் பாகத்தில் நடித்த அதே கதையின் மாந்தர்கள், இரண்டாம பாகத்திலும் நடிக்க இருக்கின்றனர் என படக்குழு தெரிவித்துள்ளது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குநர்கள் நடித்தார்கள். மணிவண்ணன், பொன்வண்ணன், கே.பி. ஜெகன், தருண் கோபி, சீமான், ரவி மரியா, ஜி.எம். குமார், ராஜ் கபூர், சிங்கம் புலி, நந்தா பெரியசாமி ஆகிய இயக்குநர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படத்தில் நடித்த கே.பி. கெஜன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர், புதிய கீதை, ராமன் தேடிய சீதை, கோடம்பாக்கம் மற்றும் என் ஆளோட செருப்பைக் காணோம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் இவர், மிக மிக அவசரம் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.