தமிழ் சினிமாவில் இருந்த வந்த ட்ராக்கை முற்றிலும் மாற்றி சமூக அக்கறை சார்ந்த படங்களை மிகவும் துணிச்சலுடன் இயக்கி வரும் ஒரு சில இயக்குநர்களில் ஒருவர் மாறி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார். அதை தொடர்ந்து தனுஷை வைத்து அவர் இயக்கிய 'கர்ணன்' படமும் திரைரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 


 


கடைசியாக வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. வைகை புயல் வடிவேல் டைட்டில் கேரக்டரில் மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜுக்கு அப்படம் நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்தது. 


 


 



 


'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே  இடைப்பட்ட நேரத்தில் அவரின் அடுத்த படமான 'வாழை' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். சிறுவர்களை அடிப்படியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், வெயில் பிரியங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதலில் இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் தற்போது திரையரங்கில் வெளியிட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 



 


 


 


வாழைத்தார் ஏற்றி சென்ற லாரில் பல சிறுவர்கள் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தால் லாரி கவிழ்ந்து அதில் பயணித்த ஏராளமான சிறுவர்கள் உயிர் இழந்தனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் 'வாழை' படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்களில் ஒருவர் மாரி செல்வராஜ் என கூறப்படுகிறது. அவரின் பல உறவினர்கள் அந்த விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இப்படி ஒரு சிலர் சொல்ல மற்றும் சிலரோ இப்படம் அவர் எழுதிய 'பேய்' என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் வரும் ஆகஸ்ட் மாதம் 'வாழை' படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தென்கிழக்கு' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் யுகபாரதியின் பாடல் வரிகளுக்கு தீ பாடியுள்ள தென்கிழக்கு... பாடல் தற்போது வெளியாகியுள்ளது.