தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரைப்பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement


தமிழ் சினிமாவில் தனக்கென சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இவருடைய இறப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






திரையுலகத்தினர் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் மனோபாலா மறைவிற்கு நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள மறைந்த மனோபாலாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மேலும், மறைந்த மனோபாலா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 


இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபாலா. தமிழில் கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர் தனது யூ ட்யூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்னைக்கு வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.


இயக்குநர் இமயம் எனப் போற்றப்படுபவரான,  பாரதிராஜா கூறியுள்ளதாவது, ”என்னிடம் எவ்வளவோ உதவியாளர்கள் பணி புரிந்தனர். ஆனால் மனோ பாலா போல் ஓவியம் வரையக்கூடியவர் யாரும் இல்லை. மனோபாலா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர். படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு பல ஆலோசனைகளை கூறியுள்ளார். மனோபாலாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நல்ல கலைஞன் நம்மிடையே இல்லை  என கூறும் போது மனது கனக்கிறது. மனது சுமையாக உள்ளது” என பாரதி ராஜா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும், தான் தற்போது சென்னையில் இல்லை எனவும் நாளை காலை மனோபாலாவுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார். 


நினைவுகளைப் பகிர்ந்த இளையராஜா


இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பின்னர் இயக்குநராக மாற்றிக்கொண்டவர் மனோபாலா. ”என்னைப்பார்க்க கோடம்பாக்கம் பாலத்தில் எத்தனையோ இயக்குநர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி என்னை பார்க்க காத்திருந்து பார்ப்பார். மேலும், என்னை அவ்வப்போது ரெக்கார்டிங் தியேட்டரில் சந்தித்து சினிமா மற்றும் சினிமாவைத் தவிரவும் அதிக விஷயங்களை என்னிடம் பகிர்வார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என மனோபாலாவுடனான தனது நினைவுகளை இசைஞானி இளையராஜா பகிர்ந்துள்ளார். 


45 வருட பழக்கம் -  சத்யராஜ்


”நானும் மனோபாலாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். அவரது இயக்கத்தில் பிள்ளை நிலா மற்றும் மல்லு வேட்டி மைனர் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மனோபாலாவின் மறைவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மனோபாலாவின் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.