மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல்  பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகின்றது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா படத்தில் வரும் குகைதான் உள்ளது.  குறிப்பாக படத்தின் க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிகர்களை தியேட்டரில் இருந்து நகரவிடவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.


அந்த அளவிற்கு படத்தின் கதையோடும் குணா குகையுடனும் ரசிகர்கள் ஐக்கியமாகிவிட்டனர் எனலாம். குணா குகை கொடைக்கானலில் அமைந்திருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசனின் படத்திற்குப் பின்னர்தான் இந்த இடத்திற்கான அடையாளம் குணா குகை என அழைக்கப்பட்டது. இன்று வரை அந்த இடம் குணா குகை என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. 


இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த சந்திப்பின் போது குணா படத்தின் இயக்குநரும் கமல் ஹாசனின் நெருங்கிய நண்பருமான சந்தான பாரதி உடன் இருந்தார். 


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான இப்படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியான நாள் முதல் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 


 குணா குகையை கண்டுபிடிக்க கமல்ஹாசன் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல. குணா படம் வெளியாவதற்கு முன்னால் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ‘நான் ரொம்ப நாளைக்கு பிறகு வித்தியாசமாக ஒரு காதல் கதைஎன்பதால் நானும் சந்தான பாரதியும் கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு  நடைபெறாத மக்கள் நடமாட்டமில்லாத இடங்களில் படமாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தேடினோம். 


கிட்டதட்ட இருவரும் 7 கிலோ மீட்டர் வரை சென்று படப்பிடிப்பு நடத்த ஏதுவான இடங்களை தேடினோம். எதுவும் கிடைக்கவே இல்லை. திரும்பி போகலாம் என முடிவு செய்த நிலையில் இன்னும் ஒரு கி.மீ., போய் பார்க்கலாம் என நினைத்து சென்றபோது தான் ஆச்சரியம் காத்திருந்தது. எட்டாவது கிலோ மீட்டரில் நாங்கள் தேடியபடி இடங்கள் இருந்தது. அந்த இடத்தில் தான் சர்ச் செட் போட்டோம். அதேபோல் ஷூட்டிங் நடத்த அந்த இடத்துக்கு செல்ல பாதை அமைத்தோம். இதேபோல் படக்குழுவினர் அனைவரும் 700 அடி பள்ளத்தாக்கிற்கு கயிறில் தொங்கியபடி சென்றோம் என தெரிவித்திருப்பார். 


விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் இந்தியளவில்  10 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து எல்லா திரையரங்குகளிலுல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நான்கு நாட்களில் இப்படம் 14.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.