மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் புதன்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் காலமானார். இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இவர் பல படங்களை வெளியிட்டு உள்ளார் . இவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை பாலிவுட்டில் ஏற்படுத்தி உள்ளது . இவருக்கு வயது 49. இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  




இயக்குனர் ஒனிர் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் ராஜ் கவுஷல் மரணத்தை அதிகாரப்பூர்வாமாக வெளியிட்டார் அதில் " “மிக விரைவில் எங்களை விட்டு போய்விட்டார். இன்று காலை திரைப்படத் தயாரிப்பாளரையும் இயக்குநரையும் நாங்கள் இழந்தோம். மிகவும் வருத்தமாக உள்ளது. எனது முதல் படமான #MyBrotherNikhil தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். எங்கள் இலக்கை நம்பி எங்களுக்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார் .





ஞாயிற்றுக்கிழமை அன்று மந்திரா மற்றும் ராஜ்  ஆகியோர் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில்  நேஹா துபியா, அங்கத் பேடி, சாகரிகா காட்ஜ், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், ஆஷிஷ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருந்து புகைப்படத்தை பதிவிட்டும் இருந்தார் , செய்தி கேட்டதும் மந்திரா பேடியின் இல்லத்திற்கு முதலில் வந்தவர் ஆஷிஷ் சவுத்ரி. 









கடந்த ஆண்டு ஜூலை மாதம், மந்திரா மற்றும் அவரது கணவர் ராஜ்  ஆகியோர் நான்கு வயது தாராவை தங்கள் வாழ்க்கையில் தத்தெடுத்து வரவேற்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே வீர் என்ற மகனும் உள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது மகளை அனைவருக்கும்  அறிமுகப்படுத்திய மந்திரா பேடி" மேலே இருந்து ஒரு ஆசீர்வாதம் போல எங்களை தேடி வந்துவிட்டாள் தாரா , நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கும் கண்களால் பார்ப்பதற்கு தேவதை ஒரு தங்கை வீருக்கு கிடைத்துவிட்டாள்" என்று பதிவிட்டு இருந்தார் .


ராஜ் கவுஷல் மரணம் மந்திரா பேடியின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . திரையுலகில் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடவுள் இவர் குடும்பத்திற்கு இதை தாங்கிக்கொள்ளும் தெம்பை தர வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .