Actress Suicide: மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனத்தபுரம் அடுத்த காரியம் பகுதியில் உள்ள தனது வீட்டில்,  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கணவர் மனோஜ் மற்றும் தந்தையுடன் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்ததாக கூறப்படும் நிலையில், அவர் தற்கொலை செய்துள்ளார். அதேநேரம், இது தற்கொலை தானா? அல்லது ரெஞ்சுஷா மேனன் கொலை செய்யப்பட்டாரா? என்ற நோக்கத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடயே, நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


ரெஞ்சுஷா மேனனுக்கு இரங்கல்:


நடிகை உயிரிழந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடன் சேர்ந்து 'ஆனந்த ராகம்' தொடரில் நடிக்கும், ஸ்ரீதேவி அனிலுடன் இணைந்து செய்த ரீல்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ரெஞ்சுஷா பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக, ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 






தொலைக்காட்சி தொடரில் பிரபலமான ரெஞ்சுஷா மேனன்:


சி.ஜி.ரவீந்திரநாத் மற்றும் உமாதேவி தம்பதியின் மகளான ரெஞ்சுஷா,  கொச்சியை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாவதற்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு 'ஸ்த்ரீ'  எனும் தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 'சிட்டி ஆஃப் காட்', 'மேரிக்குண்டொரு குஞ்சாடு', 'பாம்பே மார்ச்', 'கார்யஸ்தான்', 'ஒன் வே டிக்கெட்', 'அத்புத த்வீபு' உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பொதுமக்களிடையே பிரபலமானார்.  பல சீரியல்களில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு தொழில்முறை பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார்.


தொடரும் தற்கொலைகள்:


கடந்த மாதம் மற்றொரு மலையாள நடிகையான அபர்ணா நாயர் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சில திரைப்படங்கள் மற்றும் பல்வேறு சீரியல்களில் நடித்த 33 வயதான நடிகையான அவர், தனது வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அபர்ணா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.