மலையாளத் திரைபபட நடிகர் மோகன்லால் இன்று தனது 63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். வழக்கமான முறையில் இல்லாமல் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் மோகன்லால். மேலும்  இந்த புகைபடங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அவர். அவரது இந்த முயற்சிக்காக திரைக்கலைஞர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.


மோகன்லால் பிறந்தநாள்:


மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் எனப்படும் மோகன்லால் இன்று தனது 63 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பெரிய அளவிலான கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் மிக எளிமையான ஒரு முறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் மோகன்லால்.


கேரளாவில் இருக்கும் ஹம் என்கிற அமைப்பு நடத்தி வரும் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுடன் எளிமையாக கேக் வெட்டி அவர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூகத்தில்  பின் தங்கிய பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நடத்தப்படும் இந்த அமைப்பிற்கு தொடர்ச்சியாக தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். கடந்த ஆண்டும் தனது  பொருளாதாரத்தில் பின் தங்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த  20 குழந்தைகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத் தக்கது.


தேவதைகளின் ஆசிர்வாதம்:


இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த மோகன்லால் “இந்த அழகான தேவதைகளின் ஆசியுடன்  எனது பிறந்தநாளை முடித்துக்கொண்டேன் “ என பதிவிட்டிருக்கிறார். டோவினோ தாமஸ் நைலா உஷா ஆகிய மலையாள நடிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள். மற்றுமொரு சிறப்பான நிகழ்வு என்னவென்றால் மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டியின் வாழ்த்து. தனது ட்விட்டர் பக்கத்தில் மம்மூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனது வாழ்த்துக்களைத் பகிர்ந்துள்ளார் மம்மூட்டி.


மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் மோகன்லாலுக்கு ஒரு நல்ல ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருவர், உன்னைப்போல் ஒருவன் , காப்பான், ஜில்லா, ஆகியத் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மோகன்லால் தற்போது சூப்பர்ஸ்டார் நடித்திருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து  நடிகர் ப்ரித்விராஜ் இயக்க இருக்கும் லூசிஃபர் திரைப்படத்தின் நடிக்க இருக்கிறார் மோகன்லால்.


மேலும் ஜீத்து ஜோசஃப் இயக்கும் த்ரிஷ்யம் படத்தின் 3 ஆவது பாகம் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கும் படம் மற்றும்  சுகுமாரன் இயக்கி அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அவர். ஜெயிலர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் குறிபிடத்தகுந்த ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.