தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.

  


ஒரு துணை நடிகராக 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து சுமார் 15 படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து வந்தவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1947ம் ஆண்டு வெளியான 'ராஜகுமாரி' படத்தில் அமைந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எனக் கொண்டாடப்பட்டார். 


தனது சுமார் 115 திரைப்படங்கள் வரையில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெரும்பாலானவை 100 நாட்களையும் கடந்து ஓடி வசூலை வாரி குவித்தது. அவருடைய எந்த படமும் தோல்வி அடைந்த படங்களின் லிஸ்டில் சேர்ந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சோதனைகளை சந்தித்த சமயங்களில் கூட விடாமுயற்சியுடன் தன்னை ஒரு அதிரடி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார். அதிரடி ஹீரோவாக அவர் நடித்த படங்களில் சமூகத்தின் பிரதிநிதியாக பல்வேறு சமூக பிரச்னைகளை எதிர்த்தும், அரசியல் சாயல்களை கொண்டும் இருந்தன. 


படிப்படியாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் இருந்து துவங்கிய எம்.ஜி.ஆர், திமுகவில் இணைந்து செல்வாக்கு மிக்க தலைவராக ஆனார். பின்னர் சில கருத்துவேறுபாட்டால் அங்கிருந்து விலகி அதிமுக எனும் தனிக்கட்சியைத் தொடங்கி தலைவரானார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 130 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். சில மாதங்கள் தவிர அவர் இறக்கும் வரையில் முதலமைச்சராகவே இருந்தவர் எம்.ஜி.ஆர்.


இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாளுக்கு, இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்த்திரமும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாக திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று. 


ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த 'இளையவர்'.  புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க..." எனத் தெரிவித்துள்ளார்.