டோலிவுட்டில் பெரிதும் கொண்டாடப்படும் ஜோடிகளில் மகேஷ் பாபு - நர்மதா ஸ்ரீரோத்கருக்கு என்றுமே முதல் இடம் தான்.


தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் மகேஷ் பாபு, அவரது காதல் மனைவி நடிகை நம்ரதா ஸ்ரீரோத்கர் இருவரது புகைப்படங்கள் இணையத்தில் ஏக பிரபலம்.


படப்பிடிப்பில் மலர்ந்த காதல்


1993ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற நம்ரதா தொடர்ந்து பாலிவுட்டில் 1998ஆம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து தென்னிந்தியப் படங்களில் நம்ரதா நடிக்கத் தொடங்கிய சூழலில் 2000ஆம் ஆண்டு மகேஷ்பாபுவுடன் வம்சி படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.


அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு இரு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.


திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினாலும், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை நம்ரதா, தொடர்ந்து தங்கள் குடும்பப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.


திருமணத்துப் பிறகு நடிக்காதது ஏன்?


இந்நிலையில், திருமணத்துக்குப் பின் தான் நடிப்பிலிருந்து விலகியது குறித்து தனது சமீப்த்திய நேர்காணலில் நம்ரதா மனம் திறந்துள்ளார்.


"மகேஷ் பாபு தனக்கு வேலைக்கு செல்லாத மனைவி வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். நான் ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் என்னை வேலையை விட்டுவிடச் சொல்லியிருப்பார்.  நாங்கள் ஒருவருக்கொருவர் சில முடிவுகளை எடுத்திருந்தோம்.






திருமணத்துக்குப் பிறகு நாங்கள் முதலில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். நான் மும்பையில் இருந்து வந்ததால் பெரிய பங்களாக்களுக்கு குடியேறுவது குறித்து நான் பயந்து கொண்டே இருந்தேன். என்னுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினேன்.


ஹைதராபாத் வந்தால் அபார்ட்மெண்டில் வாழ்வேன் என்பதே எனது நிபந்தனையாக இருந்தது. அதேபோல், நான் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. அவரும் தெளிவாக இருந்தார். அதனால்தான் நாங்கள் சிறிது நேரம் எடுத்து எனது எல்லா படங்களின் படப்பிடிப்பையும் முடித்தோம்.


திருமணம் ஆனபோது எனக்கு வேலை இல்லை. நிலுவையில் இருந்த அனைத்து படங்களையும் முடித்துவிட்டேன். எங்களுக்குள் நிறைய தெளிவு இருந்தது. திருமணத்துக்குப் பிறகு தானும் மகேஷும் விரைவில் குழந்தை பெற விரும்பினோம்” என நம்ரதா தெரிவித்துள்ளார். 


தற்போதைய சூழலில் தனக்கு குடும்பத்தை விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு வருவதற்கு பொறுமை இல்லை என்றும் நம்ரதா குறிப்பிட்டுள்ளார்.