தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு நண்பர்களோடு இணைந்து தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்யவுள்ளேன். இது போன்ற உதவி மனசுக்கு சந்தோஷமா இருக்கு நைட் நிம்மதியா தூங்க முடியும் - மதுரை முத்து நெகிழ்ச்சி.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை முத்து உதவிக்கரம்


மதுரை மாவட்டத்தை சேர்ந்த 100 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த  நகைச்சுவை நடிகரான மதுரை முத்து தனது நண்பர்களுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் இந்த நிகழ்ச்சி, மதுரை காந்தி அருங்காட்சியக கூடத்தில் நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 100 தவழும் வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, 1 லட்சம் மதிப்பிலான ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, உடை, சமையல் பொருட்கள் மற்றும் தலைக்கவசம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மதுரை முத்து மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து வழங்கினார்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு நிகழ்ச்சி


அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகர் மதுரை முத்து நகைச்சுவைகளை எடுத்துக்கூறி பேசி சிரிக்கவைத்தார்.  இதனைத்தொடர்ந்து மேடையில் சினிமா பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ச்சியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்வித்தனர். 

 

லாரன்ஸ் மாஸ்டர் ரோல்மாடல்


 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மதுரை முத்து, “மாற்றுத்திறனாளிகளிலேயே தவழும் மாற்றுத்திறனாளிகள் கடுமையான சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில் நண்பர்களுடன் இணைந்து உதவி செய்கிறேன். இனியும் தொடர்ந்து பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவவுள்ளோம்.  நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா ஆகியோர் எடுத்துவரும் உதவிக்கான முன்னெடுப்பு அனைவரையும் உதவ தூண்டுகிறது. இது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியும். நடிகர் ராகவா லாரன்ஸை ரோல்மாடலாக வைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களும் இனி அனைவருக்கும் உதவி செய்ய வருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

 

உதவிகள் கிடைக்கிறது.


 

மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் உயர்ந்துவருகிறது. வாழ்க்கை முழுவதும் தவழும் நிலையில், உள்ள எங்களுக்கு உதவி கிடைப்பது ஆறுதலை தருகிறது. மதுரை முத்து அண்ணா எங்களுக்காக உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு மிக்க நன்றி” என்றனர்.