சென்னையில் இருந்து மதுரை வந்த இயக்குனரும், நடிகருமான அமீர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,


பான் இந்தியா படங்களால் மாற்று மொழி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்த கேள்விக்கு


அறிவியலின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அவரை நான் சந்தித்தேன். கேபிள் டிவி பிரச்னை சம்பந்தமாக அவரை சந்தித்தபோது, அப்போது இன்னும் கைவண்டியை ஒழிக்க வேண்டும் என்கிறபோது மிதிவண்டி கொண்டுவரப்பட்டது என்று அவர் கூறினார். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.  ஆட்டோ ரிக்ஷா வரும்போது சைக்கிள் ரிக்ஷா பாதிக்கும். ஆனால் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ஆட்டோ ஓட்ட பழகிக் கொள்ள வேண்டும். அதுபோல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அறிவியலை நம்மால் தவிர்க்க முடியாது.  திரையரங்கில் பார்த்த சினிமா இன்று உள்ளங்கைக்கு வந்து விட்டது. முன்பெல்லாம் சினிமாவில் எடிட்டிங் செய்யும் போது திரையை தூரமாக வைத்து தான் வேலை பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது பக்கத்தில் வைத்து வேலை செய்கிறார்கள். ஏனென்றால் அவையெல்லாம் ஓடிடியிலேயே வெளியாகும் என்பதால் அப்படி வேலை செய்கிறார்கள். இதை தவிர்க்கவே முடியாது. அதுபோல பான் இந்தியா படங்களும் வந்து தான் ஆகும். ஒரு மைனஸ் இருந்தால் ஒரு பிளஸ் இருக்கும். 


தொழிலாளர் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், ஓடிடிகாகவே படங்கள் எடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 250 படங்கள் வேலை நடைபெறுகிறது. சென்னையில் அனைத்து ஸ்டுடியோக்களும் பிசியாக உள்ளது. அந்தத் தொழில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அதை நாம் தவிர்க்க முடியாது. அதற்கேட்பது போல் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.


மாமன்னன் படத்துக்கு எதிர்ப்பு எழுந்தது குறித்த கேள்விக்கு


திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வது தமிழகத்தில் திராவிட கருத்துக்களாக இருந்தாலும், பெரியாரின் கருத்துக்களாக இருந்தாலும் திரைப்படங்கள் மூலமாகத்தான் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதில் மாரி செல்வராஜ்  சாதி மோதலை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. அந்த சமூகத்தினர் ஒரு 2000 ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரையின் மூலமாக சொல்ல முயற்சி செய்கிறார். அதே உரிமை அனைவருக்கும் உள்ளது. மக்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். இந்த கருத்தை சொல்லக்கூடாது என்பதல்ல. இது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாக தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.




வடசென்னை ராஜனின் கதாபாத்திரம் முழு படமாக்கப்படுமா என்ற கேள்விக்கு


எனக்கும் விருப்பம் உள்ளது. ஏற்கனவே அந்த காட்சிகளை என்னிடம் காட்டினார். இயக்குனர் வெற்றிமாறனுக்கு நிறைய வேலைகள் உள்ளது. அதனால் அவர் இன்னும் அதை ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். சூழல் வந்தால் நானும் அதை பார்க்க ஆர்வலாக உள்ளேன்.


உங்களுடைய சொந்த இயக்கம் குறித்த கேள்விக்கு


தற்போது படப்பிடிப்பு நடைபெறுகிறது. ‘இறைவன் மிகப் பெரியவன்’ ராமநாதபுரம், கோயம்புத்தூர் பகுதிகளில் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றார்.