தமிழ் சினிமாவின் ஒவ்வொரு துறைகளிலும் ஜாம்பவான்களை ரசிகர்களுக்கு தந்துள்ளது. அந்த வகையில் பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், கண்ணதாசன், வாலி ஆகியோரைப் போல புலமைத்துவம் பெற்ற பாடலாசிரியராக தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக கட்டி ஆள்பவர் வைரமுத்து. அவருக்கு இன்று 71வது பிறந்த நாள் ஆகும்.


வைரமுத்து ராஜ்ஜியம்:


வடுகப்பட்டியில் வளர்ந்த இந்த வைரமுத்துவை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கொண்டாடுவதற்கு காரணம் அவரது தனித்துவமான மற்றும் கவித்துவமான வரிகளே ஆகும். அப்பேற்பட்ட கவிஞர் வைரமுத்துவை முதன்முதலில் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக திரையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும் ஆவார்கள்.


தனது திறமை மேல் அதீத நம்பிக்கை கொண்ட வைரமுத்து முதன்முறையாக பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டது எப்படி தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக புகழின் உச்சத்தில் பாரதிராஜா கொடிகட்டிப் பறந்த சமயத்தில் நிழல்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தின்போது வைரமுத்து தான் எழுதிய திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை புத்தகத்தை பாரதிராஜாவிடம் வழங்கினார்.


வாய்ப்பு கேட்டது எப்படி?


பாரதிராஜாவிடம் தனது புத்தகத்தை வழங்கிய வைரமுத்து அதன்பின்பு, “ தமிழ் சினிமாவில் அனைத்து துறையும் மாறிவிட்டது, ஒளிப்பதிவு மாறிவிட்டது, நடிப்பு மாறிவிட்டது, இசை மாறிவிட்டது, வசனத்தின் மொழி மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது. ஆனால், மாறாமல் இருப்பத திரைப்பாடல்களின் மொழி மட்டுமே. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் என்னால் கொஞ்சம் மாற்ற முடியும் என்று நம்புகிறேன்”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஆச்சரியப்பட்ட இளையராஜா:


அவரது பேச்சில் மயங்கிய பாரதிராஜா இந்த இளைஞனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து, வைரமுத்துவை இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது இளையராஜாவின் மெட்டுக்கு பாடல் வரிகளை எழுதிக்கொடுத்துள்ளார் வைரமுத்து. அவர் எழுதிய வரிகளை படித்த இளையராஜா, பாரதிராஜாவை தனியாக அழைத்துச் சென்று எங்கய்யா இந்த ஆளைப்பிடிச்சுட்டு வந்த. இவ்ளோ பிரமாதமாக எழுதியிருக்கான் என்று ஆச்சரியத்துடன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்பு, பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் தமிழ் சினிமாவை கலக்கிய பாடல்களின் பட்டியல் ஏராளம்.


பாரதிராஜா படங்கள் மட்டுமின்றி இளையராஜா இசையில் பெரும்பாலான பாடல்களை வைரமுத்துதான் எழுதியிருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என மிகப்பெரிய தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்தின் பல படங்களுக்கு தொடக்க பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் வைரமுத்துவுக்கே சாரும்.