பிரபல கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன், உயிரிழந்த தன் மகள் தூரிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இரங்கல் கவிதைகள் வாசிக்கத் தொடங்கி கவிஞராக உருவெடுத்து, தொடர்ந்து தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடலாசிரியர்களுள் ஒருவராக வலம் வருபவர் கபிலன்.


2001ஆம் ஆண்டு வெளியான தில் படத்தில் இடம்பெற்ற ‘உன் சமையலறையில்’ மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்களை தன் முதல் பாடலிலேயே ஈர்த்த கபிலன், தொடர்ந்து ஆள்தோட்ட பூபதி, இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் பட பாடல்கள் என கோலிவுட்டில் கவனமீர்த்து தனக்கென தனி இடத்தைப் பிரித்தார்.


நடிகர் கமல், விஜய் என கோலிவுட்டின் ஸ்டார் நடிகர்களுக்கு தொடர்ந்து பாட்டெழுதி வந்த கபிலன், இறுதியாக பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படப் பாடல்களுக்கு பாட்டெழுதி கவனம் ஈர்த்திருந்தார்.


இச்சூழலில் கபிலனின் மகள் தூரிகை சென்ற செப்டெம்பர் 9ஆம் தேதி, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


இவர் ‘பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இதழையும், தி லேபிள் கீரா  (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்த தூரிகை, வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தது திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


மேலும் தற்கொலைக்கு எதிராகவும், தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வளிக்கும் வகையிலும் தன் இணைய பக்க்ங்களில் பேசி வந்த தூரிகை தற்கொலை செய்து கொண்ட உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில், தன் மகளின் இழப்பால் முடங்கிப்போன கபிலன், தன்னை ஒன்று திரட்டி மீண்டும் தன் பணிகளில் சமீபகாலமாக மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.


இச்சூழலில் இன்று தன் மகள் தூரிகையில் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து கபிலன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கபிலனின் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள் தூரிகையை நினைவுகூர்ந்தும், கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.




கபிலன் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.