பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெறும் பூங்குழலி கேரக்டர் குறித்து லைகா நிறுவனம் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 






கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 


5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 






இதற்கிடையில் இந்நிகழ்ச்சிக்கு முன் படத்தில் இடம் பெறும் கேரக்டர்களை லைகா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் புகைப்படங்களை வெளியிட்டு சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்கள் என குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பூங்குழலி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் கேரக்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் காற்றைப் போல் மென்மையும், சமுத்திரத்தைப் போல வலிமையும் நிறைந்த சமுத்திரகுமாரி பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது.