இன்றைய தலைமுறையினரின் மோஸ்ட் வான்டட், மோஸ்ட் ஃபேவரட் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடி மீதும் ரசிகர்களின் கவனம் இருந்து வருகிறது. முதல் படமே சிறப்பான ஒரு திரைக்கதையை கொடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்.


ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் உச்சபட்ச இயக்குநராக பல முன்னணி ஹீரோக்களும் கூட்டணி சேர விரும்பும் ஒரு மாஸ் இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்தை இயக்கியதற்கு பிறகு தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து மிகவும் மாஸாக 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


 



அமீர்கானை இயக்கும் லோகேஷ்:


இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் நெக்ஸ்ட் படம் குறித்த பேச்சுக்கள் சில அடிபடுகின்றன. கார்த்தி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'கைதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர் கானை அடுத்ததாக இயக்க போவதாக தற்போது செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் கிட்டத்தட்ட இந்த காம்போவில் படம் உருவாவது உறுதியாகி விட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதன் மூலம் அமீர் கான் பான் இந்தியன் நடிகராக என்ட்ரி கொடுக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் அமீர் கான் நடிப்பில் வெளியான கஜினி படத்தின் ஹிந்தி ரீ மேக் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  


 




தற்போது அமீர் கான் 'சிதாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார். 2022ம் ஆண்டு வெளியான 'லால் சிங் சத்தா' படத்திற்கு பிறகு இப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - அமீர் கான் கூட்டணி சேரும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது என்பதால் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.