Boycott லால் சிங் சத்தா ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது குறித்து, நடிகர் விஜய்தேவரகொண்டா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். 


இது குறித்து அவர் பேசும் போது, “ ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தாண்டி இயக்குநர், நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர். அங்கு 200 முதல் 300 நடிகர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு பணியாளர்கள்தான். ஒரு படத்தின் மூலம் பல பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. அதன் மூலம் பல மக்கள் வாழ்கின்றனர். 




அமீர்கான் சார் லால் சிங் சத்தா படத்தை எடுத்து இருக்கிறார். அங்கு அமீர்கான் என்பது அதில் நடித்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு நடிகரின் பெயர் அவ்வளவே. ஆனால் இதில் 2000 முதல் 3000 குடும்பங்கள் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் இந்தப்படத்தை தடை செய்தால், அங்கு அமீர்கான் மட்டும் பாதிக்கப்படமாட்டார். ஆயிரக்கணக்கான  மக்களின் வேலையும், அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இது ஏன் நடக்கிறது என்றே தெரியவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது அமீர்கானை மட்டும் பாதிக்காது.” என்று பேசியிருக்கிறார். 


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது. அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்தப்படத்தில் நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.


சர்ச்சையான பேட்டி


முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார். அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது. அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.


இந்த நிலையில் அது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் அமீர்கான், “ இது போன்ற பாய்காட் பாலிவுட்.. பாய்காட் அமீர்கான்.. பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. நாட்டை நேசிக்கிறேன் நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன். நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துர்திஷ்டவசமானது. மேலும் தனது ரசிகர்களிடமும், பார்வையாளர்களையும் கேட்டுக்கொண்ட அமீர்கான், “ ஆனால் அது அப்படி இல்லை என்றும் தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்று பேசினார்.







மேலும் அவர், “ நான் யாரையாவது, எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது இந்தப்படத்தை பார்க்க விரும்பவில்லை என்றால் அவரது உணர்வை நான் மதிக்கிறேன். பாய்காட் லால் சிங் சத்தா படத்தை ட்ரோல் செய்யும் விஷயத்தை பொருத்தவரை அதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நான் என்னுடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.