லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் பற்றி பலரும் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். 


செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


இந்த படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலை பெற்றுள்ளது. இதனிடையெ லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டாரங்கில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான் அப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் பற்றி பலரும் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். லியோ படத்தில் முக்கியமான பிளாஷ்பேக் காட்சியை மன்சூர் அலிகான் வாயிலாக தெரிவிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த காட்சி பலவீனமாக அமைந்தது. 


அதனைத் தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்த பிளாஷ்பேக் காட்சியில் மன்சூர் அலிகான் பொய் கூட சொல்லியிருக்கலாம். அதற்கு முன்னால் இருந்த ஒரு முக்கியமான வசனம் நீக்கப்பட்டதாகவும் கூறினார். இதனை குறிப்பிட்டு பேசிய மன்சூர் அலிகான், “தளபதி ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்பிய ஃப்ளாஷ்பேக் என்னவென்றால், கனடாவில் இருந்து இரவு 1 மணிக்கு எனக்கு போன் செய்து நீங்கள் எப்படி பிளாஷ்பேக் காட்சியில் பொய் சொல்லலாம் என கேட்டார்கள். தளபதி விஜய் தான் "தமிழகத்தின் நாளைய தீர்ப்பு". உங்களை நம்பி தான் இந்த நாடு இருக்கு. அதற்கு விஜய் கடுமையாக உழைக்கணும். நீங்களும் (ரசிகர்கள்) ஒத்துழைப்பு கொடுக்க காத்திருங்கள்.


அதேபோல் த்ரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தில் அவர் அருகில் கூட என்னால் செல்ல முடியவில்லை. அட்லீஸ்ட் மடோனா பாப்பா கிட்டயேவாது போகணும்னு நினைச்சேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. எப்பொழுது பிரச்சனை வந்தாலும் விஜயகாந்த் மாதிரி யாராவது வந்து காப்பாற்றுவார் என நினைத்தேன். ஆனால் LCU வில் புதிதாக நெப்போலியன் வந்து காப்பாற்றுகிறார். அந்த நெப்போலியன் ஜார்ஜ் தான் என்று தெரிந்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. ரசிகர்களே தமிழகத்தின் நாளைய தீர்ப்பை எழுத தயாராகுங்கள். புகைப்பிடிப்பது, மது அருந்ததை தவிருங்கள்” என மன்சூர் அலிகான் கூறினார்.