தமிழகத் திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ படம் நாடு முழுவதும் வெளியாகிவுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகிவுள்ளது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் பிரகாஷ் திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமான முறையில் மேளதாளங்கள் முழங்க நடனமாடி லியோ திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதனிடையே பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் என திருவிழா போன்று விஜய் படத்தை கொண்டாடினர். இதனிடையே ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு திரையரங்குக்குள் உள்ளே நுழையும் உட்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எந்தத் திரையரங்கு என்பது குறித்து தெரியாமல் டிக்கெட்டை வைத்துக்கொண்டு மாறி, மாறி ரசிகர்கள் ஓடிக்கொண்டிருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சிலர் தடுப்பு கம்பிகளை தாண்டி குதித்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். படிக்கட்டு ஏறிக்கொண்டு திரையரங்குக்குள் உள்ளே நுழைந்தபோது சுவர் உடைந்தது. மேலும் பேனர்கள் கிழிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சு முடியாமல் தவித்தனர். கூட்டத்தை சரிசெய்து திரையரங்குக்குள் ரசிகர்களை உள்ளே செல்ல வழி ஏற்படுத்தினர்.



இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் லியோ படம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரையிலான நாட்களில் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் "லியோ" திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி 19.10.2023 முதல் 24.10.2023-ஆம் தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை ஒரு நாளில் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது. காலை 9.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 01.30 மணி முதல் காலை 9.00 மணி வரை எந்த காட்சியும் திரையரங்குகளில் திரையிடக்கூடாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 



இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சேலம் வருவாய் கோட்டாட்சியர் 94450 00433 என்ற கைப்பேசி எண்ணிலும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00434 என்ற கைப்பேசி எண்ணிலும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் 94450 00436 என்ற கைப்பேசி எண்ணிலும், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00435 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான இருக்கை வசதிகள், வாகன நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.