லால் சலாம் படத்தின் மூலம் ஐஸ்வர்யா புரட்சியை கையில் எடுத்திருக்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் “லால் சலாம்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்குன் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக ரஜினியின் “மொய்தீன் பாய்” கேரக்டர் தோற்றம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த லால் சலாம் படத்தின் டீசர் இரண்டும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விளையாட்டில் இருக்கும் சாதி, மத வேறுபாடுகளை பற்றி அழுத்தமாக பேசக்கூடிய படமாக லால் சலாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 


இதில் பேசிய ரஜினிகாந்த், “நடிகர் விஜய் பற்றி நிறைய விஷயங்கள் பேசினார். குறிப்பாக தன்னுடைய காக்கா- கழுகு கதை விஜய்யை குறிவைத்து சொல்லப்பட்டது அல்ல. அவரையும் என்னையும் ஒப்பிட்டு பேசாதீங்க. எங்களுக்கு நாங்களே தான் போட்டி. ரசிகர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து படம் மற்றும் மகள் ஐஸ்வர்யா பற்றி பேசிய ரஜினி, “லால் என்றால் சிவப்பு..லால் என்றால் புரட்சி.
சலாம் என்றால் வணக்கம்.. புரட்சி வணக்கம் என்பது தான் இந்த படத்தோட டைட்டிலுக்கான அர்த்தம் என ரசிகர்களுக்கு புரிய வைத்தார். மேலும் இந்த படத்துல ஐஸ்வர்யா புரட்சியை கையில் எடுத்திருக்கிறாங்க. லால் சலாம் படத்துக்கான கதையை ஃபர்ஸ்ட் ஐஸ்வர்யா சொல்லும்போது இது கண்டிப்பா தேசிய விருது வாங்கும் அப்படின்னு சொன்னாங்க.  


நானோ விருதுன்னு சொன்ன உடனே இதெல்லாம் நமக்கு செட் ஆகாது என பேக் அடிச்சுட்டேன். நமக்கு தேவை ரிவார்டு மற்றும் டப்பு தான். அதுக்கப்புறம் முழு கதையும் படிச்ச பிறகு அதில் பெரிய நடிகர் நடிச்சா நல்லாருக்குமுன்னு சொன்னேன். பின்னர் நானே நடிக்கின்றேன்னு சொன்னேன். அந்தளவு அருமையான கதை. ஆரம்பத்தில் சில தயாரிப்பாளர்கள் இதனை தயாரிக்க முன்வரவில்லை. ஆனால் லைகா தமிழ்குமரன் தயாரிக்க ஒப்புக்கொண்டார். இந்த காலத்துக்கான தேவையான அரசியல் கருத்து கொண்ட படமாக லால் சலாம்  இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.