நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து மூன்றாம் பாகம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 


கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகர் யஷ் நடிப்பில்  கேஜிஎஃப் படம் வெளியாகியிருந்தது. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு எவ்வித எதிர்பார்ப்புமே இல்லாமல் வெளியான கேஜிஎஃப் தமிழில் சிறந்த டான் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. வசூலிலும் சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாகியிருந்தது. 






எதிர்படமாக தமிழில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் வெளியான நிலையில், கேஜிஎஃப் - 2க்கு இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. வசூலிலும் 1000 கோடியை கடந்த இப்படம் முடிவுக்கு வரும் என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக 3ஆம் பாகம் வெளிவரும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 3 ஆம் பாகத்துக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 






இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் யஷிடம் கேஜிஎஃப் 3 குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு நான் அடுத்தாக கேஜிஎஃப் 3 ஆம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதில் உண்மையில்லை. இப்போதைக்கு அப்படம் தொடங்கப்படாது. வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்பும் நான் நடிக்கவுள்ள படங்களை பற்றிய வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என அவர் கூறியுள்ளார். 


இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆருடனும் இணையவுள்ளார் என்பதால் 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு கேஜிஎஃப் 3 பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது.