பிரபல மலையாள நடிகரும் முன்னாள் மக்களை எம்.பியுமான இன்னோசென்ட் உயிரிழந்தார். 


பிரபல மலையாள நடிகர் இன்னோசென்ட். இவருக்கு வயது 75. உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 3ஆம் தேதி இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இன்னசென்ட்டின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ரசிகர்களின் இதயங்களில் மறக்க முடியாத இடத்தைப் பெற்ற கலைஞர் என புகழஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும்,”இடதுசாரி அரசியலின் நலன் விரும்பியான இன்னசென்ட் 1948 ஆம் ஆண்டு வெளியான இன்ரிஞ்சாலக்குடாவில் பிறந்தார். இவர் 1972 ஆம் ஆண்டு பிரேம் நசீர், ஜெயபாரதி நடித்த 'நிருத்யஷாலா' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 


தொடர்ந்து ராம்ஜி ராவ் பேசும், 'மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங், கிளுக்கம், காட்பாதர், வியட்நாம் காலனி, நாடோடிகட்டு, மணிச்சித்திரதாழ், கல்யாணராமன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடத்திலும், கேளி காதோடு காதோரம் போன்ற படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடத்திலும்  இன்னசென்ட் சிறப்பாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.


கடைசியாக இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய கடுவா படத்தில் நடித்த இன்னசென்ட் மலையாள திரையுலகில் 5 தசாப்தங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இவர் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிலையில்  மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான  அம்மாவில் தொடர்ந்து 12 ஆண்டுகள் தலைவராக பணியாற்றினார்.


அரசியல் வாழ்க்கையில் இன்னசென்ட் 1979  ஆம் ஆண்டு இரிஞ்சாலக்குடா நகராட்சியின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சாலக்குடி மக்களவைத் தொகுதியிலிருந்து  இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடிகர் மோகன்லால் வெளியிட்ட பதிவில், அண்ணன் என்ற பெயரில் தான் இன்னசென்ட்டை எனக்கு தெரியும். அவரை, அப்படித்தான்அழைத்தேன் எனவும் மோகன்லால் தெரிவித்துள்ளார். இன்னசென்ட்டை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் சமாதானப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். 


மேலும் அதில்  சுயநினைவை இழப்பதற்கு ஒரு நாள் முன்பு இன்னசென்ட் தன்னிடம் பேசியதை நினைவு கூர்ந்துள்ளார். அவரின் குரல் சோர்வாக இருர்ந்ததாகவும், அப்போது கூட வேடிக்கையாக ஏதோ சொல்ல முயன்றார். இன்னசென்ட் அவரது சினிமா வாழ்க்கையோ, அரசியலோ, தனிப்பட்ட வாழ்க்கையோ என அனைத்திலும் அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். இன்னசென்ட் என்ற அந்த பெயர் அவரைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.