நடிகர் அமிதாப்பச்சன் வழங்கும் குரோர்பதி நிகழ்ச்சியில்  பெங்களூரைச் சேர்ந்த ஒரு போட்டியாளர் ரூ.1 கோடி வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். 


சோனி டிவியில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி பிரபலமானது. தற்போது இதனுடைய 14வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் ஷாருக்கான் தொகுத்து வழங்கிய மூன்றாவது சீசன் தவிர மற்ற அனைத்தையும் 13 சீசன்களிலும் அமிதாப்பச்சன் தான் தொகுப்பாளராக உள்ளார். அமிதாப்பின் நிகழ்ச்சி டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து இன்றளவும் முதலிடத்தில் உள்ளது. 






இதற்கிடையில் தற்போதைய சீசனில் பெங்களூரைச் சேர்ந்த தோல் மருத்துவர் அனு வர்கீஸ் என்பவர் பங்கேற்று விளையாடி வருகிறார். அவரது கணவர் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருக்க தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் டாக்டர் அனு  ரூ.75 லட்சம் வரையிலான கேள்விகளில் வெற்றி பெற்று அடுத்ததாக ரூ.1 கோடிக்கான கேள்விக்காக காத்திருக்கிறார். அவர் அந்த தொகையை வென்றாரா இல்லையா என்பது அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோட்களில் தெரிய வரும். 






இந்த ப்ரோமோவில் ரூ.50 லட்சம் கேள்வியில் வெற்றி பெற்ற அனுவுக்கு  அமிதாப் வாழ்த்து தெரிவித்ததோடு பரிசுத் தொகையில் உங்கள் கணவருக்கு என்ன பரிசளிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு எதுவும் தரமாட்டேன் என கூறி அமிதாப்பை அனு அதிர்ச்சியடைய வைத்தார். இதேபோல் ரூ.75 லட்சம் வென்ற பிறகும் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார். அப்போது அவரே எனக்கு பரிசு தருவதில்லை. அதனால் நானும் தரப்போவதில்லை என அனு கூறுகிறார். 


இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக குரோர்பதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.