மறைந்த வாலிப கவிஞர் வாலி, தன்னுடைய நினைவுகளை பல தளங்களில் பகிர்ந்துள்ளார். ஆனால், பிரபலங்கள் பலரை கொண்டு அவரது நினைவுகளை பெற்று பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறது வசந்த் டிவி. அவ்வாறு வசந்த் டிவியில் ஒளிபரப்பான ஒரு பேட்டியில் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது மனதில் தோன்றிய கேள்விகளை கவிஞர் வாலி முன்பு முன் வைத்தார். 


அப்பொழுது, நிறைய கேள்விகளுக்கு கவிஞர் வாலி பதிலளித்தாலும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடனான முதல் சண்டை குறித்து மனம் திறந்தார். அவை பின்வருமாறு : 


‛‛ஏவிஎம் ஸ்டுடியோவில் காக்கும் கரங்கள்ன்னு ஒரு பூஜை, நம்ம திருலோக் சந்தர் தான் இயக்குநர். அந்த படத்துக்கு கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதி இருக்காரு. மிச்ச பாட்டுலாம் நான் எழுதினேன்.  ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக அந்த பாட்டு ரெக்கார்டிங்க்கு முன்பு நாலு நாள் முன்னாடி, என் சிஸ்டர், என் பிரதர் எல்லாரும் மும்பைல இருந்தாங்க. மும்பைபோனா அவங்கள பார்க்கலாம்ன்னு நினச்சேன். ஏவிஎம்ல ரங்கசாமி ஒருத்தர்தான் இன் சார்ஜா இருந்தாரு. 


அவர்கிட்டபோய், நான் மும்பைல பொண்ணு பார்க்க போறேன். எனக்கு ஒரு 5 ஆயிரம் வேணும்ன்னு கேட்டேன். உடனே சாயிந்திரம் வீட்டுக்கு அனுப்பிடாரு பணத்த, ரெக்கார்டிங் நடக்குற அன்னைக்கு நான் போகல. தயாரிப்பாளர் செட்டியார் நான் எங்கன்னு ரங்கசாமிகிட்ட கேட்க, அவரும் வாலி பொண்ணு பார்க்க போய்ட்டாருன்னு சொல்லிடாரு. 


சரி நியமான காரணம்தானேன்னு விட்டுட்டாரு. அப்பத்தான் இந்த பத்திரிகை காரங்க வாலி வரலையா..? வாலி வரலையா..? கேள்வி கேட்க, செட்டியார் வாலி பொண்ணு பார்க்க போய்ட்டாருன்னு சொல்லிடாரு. அப்ப தினத்தந்தி காரன் என்ன பண்ணிட்டான் பொண்ணு பார்பதற்காக வாலி மும்பை சென்றுவிட்டார்ன்னு போட்டான். 




இதுக்கு நாலு நாளுக்கு அப்புறம் நான் எம்.ஜி.ஆர பார்த்தேன். அவரு இப்படி தினத்தந்தில உனக்கு பொண்ணு பார்க்குறதா போட்டு இருக்கு. என் தலைமையிலதான் உனக்கு கல்யாணம்னு சொன்னாரு. அப்படியே, என்கிட்ட உனக்கு பொண்ணு பிடிச்சுருக்கான்னு கேட்டாரு. 


நான் பொண்ணு பிடிக்கலன்னு சொன்னேன். அதற்கு அவரு நீங்க கெட்ட வழியில நிறைய போறதா கேள்விப்பட்டேன். சீக்கிரம் நல்ல பொண்ண பாருங்க நானே கல்யாணத்த நடத்துறேன்னு சொன்னாரு. ஆனா, நான் என்ன பண்ணேன் அடுத்த வாரமே என் லவ்வர கூட்டிட்டுபோய் திருப்பதில கல்யாணம் பண்ணிட்டேன். அன்னைக்கு சாயங்காலம் மாலை முரசுல கவிஞர் வாலி காதல் திருமணம்ன்னு பெரிய செய்தி. எம்.ஜி.ஆர் பார்த்து ஆடிட்டாரு. 


ஒரு வார்த்தை கூட சொல்லலையேன்னு எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு கோவம். அதுக்கு அப்புறம் எம்.ஜி.ஆர் என்கிட்ட பேசல. அப்புறம் எம்.ஜி.ஆர் கார் ஒருநாள் என் வீட்டுக்கு வந்துச்சு. எம்.ஜி.ஆர் கார் டிரைவர் ராமசாமி என்கிட்ட வந்து சின்னவர் (எம்.ஜி.ஆர்) உங்கள டிபன் சாப்ட கூப்டு வர சொன்னாருன்னு சொன்னான். எதுக்குன்னு தயங்குனேன். என் மனைவி வந்து எம்.ஜி.ஆர் கூப்பிடுறாரு கெளம்பி போங்கன்னு சொல்ல, நானும் போய் சாப்பிட்டேன். அற்புதமா இருந்துச்சு அவங்க வீட்டு டிபன். ஆறு வகை டிபன் இருந்துச்சு.


அதுல, இடியாப்பம், இட்லி,தோசை, சாம்பார், மொதநாள் வச்ச மீன் குழம்பு வச்சு சாப்டுட்டு இருக்கேன். அப்ப எம்.ஜி.ஆர் எதுக்கு உன்ன கூப்டேன்னு நினைக்காத, என் படத்துக்கு நீ பாட்டு எழுதணும்னு சொன்னாரு, அது சாயிந்திரம் மகாதேவன் கூட உட்கார்ந்து எழுதுறீங்க அப்படினாரு. சரின்னு எழுதுனேன். அந்த பாட்டுதான் எங்கே போய்விடும் காலம், என்னையும் வாழ வைக்கும். கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும் கே.ஆர்.விஜயா கூட எம்.ஜி,ஆர் பாடிட்டு இருப்பாரு. 


இதுமாதிரிதான் அளவு கடந்த அன்பு, எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது” என்று வாலி மனம் திறந்தார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண