சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது வெள்ளித்திறையில் கால் பதித்துள்ளார். சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் வசூl ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் கவினுக்கு நல்ல மார்கெட்டையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் கவின் தனது அடுத்த படத்துக்கான கதை கேட்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். குறிப்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கவினிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பு நிறுவனமான ’ரவுடி பிக்சர்ஸ்’ வெளியிடுவார்கள் என தெரிகிறது. 







விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவுக்கு சொந்தமான  ’ரவுடி பிக்சர்ஸ்’  நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஒடிடியில் அதிக லாபத்துக்கே விற்றுவிட்டனர். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவனே இயக்கி 7 Screen Studios உடன் இணைந்து தயாரிக்கிறார் . இது தவிர கூழாங்கல் என்னும் படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிரது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. பல தேசிய திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் “two two two " பாடல் சமீபத்தில் வெளியாகி , ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாடலுக்கு அனிருத் இசையமைத்து, பாடி நடித்திருந்தார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிரபல  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.


மேலும் 8 தேசிய விருதுகளை பெற்ற ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் மாபெரும் பலமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன், த்ரிஷா மற்றும் நயன்தாராவை கொண்டு ஒரு முக்கோண காதல் கதையை உருவாக்க முடிவு செய்தார். ஆனால் இறுதியில் கடந்த 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விஜய்சேதுபதியை ஹீரோவாக வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். சுமார் 4 ஆண்டுகள் கழித்து படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.