கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருந்த வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தற்போது படத்தை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

வா வாத்தியார் 

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் வா வாத்தியார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி , ராஜ்கிரண் , சத்யராஜ் ஆகியோ இப்படத்தில் நடித்துள்ளார்கள் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி 8 ஆண்டுகளுக்குப் பின் வா வாத்தியார் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகன் கார்த்தி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து கடைசியாக டிசம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 

இடைக்கால தடை

வா வாத்தியார் திரைப்படத்தை தயாரித்துள்ள ஞானவேல்ராஜா, கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சனைகளால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். அர்ஜூன்லால் சுந்தரதாஸ் என்பவரிடமிருந்து அவர் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜூன்லால் சுந்தரதாஸ் திவாலானவராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது சொத்துகளை நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றம் சொத்தாட்சிய அலுவலகத்தை நியமித்தது.

Continues below advertisement

ஞானவேல்ராஜா பெற்ற அந்த 10 கோடி ரூபாய், வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை முழுமையாக செலுத்தப்படும் வரை வா வாத்தியார்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அர்ஜூன்லால் சுந்தரதாஸுக்கு செலுத்த வேண்டிய 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகை முழுமையாக வழங்கப்படும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் டிசம்பர் 10 ஆம் தேதி உத்தரவிட்டது. 

எம்.ஜி ஆர் நினைவு தினத்தில் ரிலீஸ்

தற்போது படத்தை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குள்ளாக கடன் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக தயாரிப்பாளர் மற்றும் கார்த்தி தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.