திருமணமானவுடனேயே தாய்மைய ஏற்பது என்று ஆலியா பட் எடுத்த முடிவை பாலிவுட் நடிகையும், பெபோ என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்டைல் திவாவுமான கரீனா கபூர் வரவேற்றுள்ளார்.


பாலிவுட் குயின் ஆலியா பட். மகேஷ் பட்டின் மகள், பூஜா பட்டின் தங்கை, ரன்பீர் கபூர் மனைவி இப்படி தனக்கு பிரமாண்ட அடையாளம் கொண்டவர். ஆலியா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும், தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அவர்களின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. 


இந்நிலையில் அவர் தனது கர்ப்பத்தை அண்மையில் அறிவித்தார். அது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதற்கு ஆலியா பட்டும் தகுந்த பதிலடி கொடுத்தார். "ஏதோ காரணத்துக்காக எப்போதும் எல்லோரின் கண்களும் பெண்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை உற்று நோக்குகிறது. நான் இளமையாக இருக்கிறேன். அதனால் நான் என் வாழ்க்கையில் நடிப்பதைத் தவிர வேறேதும் செய்யக் கூடாதா? ஒரு குடும்பம் அமைத்துக் கொள்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் எப்படி எனது தொழில்முறை வாழ்வை மாற்றும். இவை இரண்டுமே இரு வெவ்வேறு துருவங்கள். ஆகையால் எனது கர்ப்பம் பற்றிய முட்டாள்தனங்களை நான் கண்டு கொள்ளப் போவதில்லை. நான் தொடர்ந்து சாதனைகள் செய்வேன்" என்று கூறியிருந்தார்.




கரீனா கபூர் வரவேற்பு:


இந்நிலையில் ஆலியா பட்டின் முடிவை கரீனா கபூர் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக மிட்டே என்ற பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியில், "ஆலீயா துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். அவர் தனது படங்களை ஒருபுறம் புரோமோட் செய்து கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் முதல் குழந்தையை வரவேற்கத் தயாராகிவருகிறார். தற்போதைய நிலவரப்பட்டி அவரைவிட பெரிய நடிகை யாருமில்லை. அவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நான் மிகைப்படுத்திப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர் உண்மையிலேயே அசாத்திய திறமைசாலி என்பதால் இதனைக் கூறுகிறேன்.


குழந்தைப் பேறுக்குப் பின்னர் தான் அவர் இன்னும் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்கப் போகிறார். நான் நேசித்த மனிதருடன் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தனது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வாழ்க்கையில் மிகவும் அழகான விஷயத்தை அனுபவிக்க அவர் விரும்புகிறார். அதற்காகவே நான் அவரை இன்னும் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். நான் அவருடைய விசிறி" என்று கூறினார். 


ரன்பீர் கபூரும், கரீனா கபூரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.