பிரபல பாலிவுட் இயக்குநர்  கரண் ஜோஹர் நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். 


பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கரண் ஜோஹர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தங்கள் மனம் திறந்த பதில்களை அளிப்பதால் இதனை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இதன்  7வது சீசன் தொடங்கியது. இதில்  ஆலியா பட் - ரன்பீர், சாரா அலி கான், ஜான்வி கபூர், உள்ளிட்ட பல நடிகர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சர்ச்சையாகும் அளவிற்கு பதிலளித்தனர். 


 






இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். அப்போது சமந்தாவிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோகர், தென்னிந்திய திரைப்படத் துறையில் யார் பிரபலமான நடிகை என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சமந்தா, சற்றும் யோசிக்காமல் சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை குறிப்பிட்டு நான் நயன்தாராவுடன் ஒரு படம் செய்தேன். தென்னிந்தியாவில் அவர் தான்  மிகப்பெரிய நடிகை  என தான் நினைப்பதாக கூறினார். அதற்கு கரண் ஜோஹர், அவர் என் லிஸ்டில் இல்லை என கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.






கிடைத்தது வாய்ப்பு என்று சமூகவலைதளங்களில் கரண் ஜோஹரை விமர்சனங்களால் வறுத்தெடுத்தனர். இந்த நிலையில் கரண் ஜோஹர் தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில்,“ ஆர்மேக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் சமந்தாவே நம்பர் ஒன் ஸ்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்ததின் அடிப்படையிலேயே அதை சொன்னதாகவும்,  நயன்தாராவின் ரசிகர்கள் தான் கூறியதை தவறாக புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். நயன்தாரா பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.