பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய சினிமாவில்  புராண மற்றும் இதிகாச கதைகளை படமாக்குவதற்கு  பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இராமயணம் போன்ற  கதையை மாறுபட்ட கோணத்தில் படமாக்கும் முயற்சிகளிலும் சில இயக்குநர்கள் களம் கண்டு வருகின்றனர்.  முன்னதாக இராமயண கதைக்களத்துடன் நிறைய படங்கள் வெளியாகின. தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும்  நயன்தாரா நடிப்பில் “ஸ்ரீராமராஜ்ஜியம் “ என்ற திரைப்படம் வெளியானது. இதில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்திருந்தனர். தற்பொழுது பாகுபலி நாயகன்  பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ”ஆதிபுருஷ் ”என்ற பெயரில் ராமாயண கதை படமாகிறது. 




அதேபோல முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் , ராமாயண கதையை தழுவி மற்றொரு படமும் தயாராகி வருகிறது. இதனை ”தங்கல்” படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி மற்றும் ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான ”மாம் ”படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இயக்குகின்றனர்.இந்த புதிய படத்திற்கான நடிகர்கள் தேர்வில் இறங்கியுள்ளது படக்குழு. முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரமாக உள்ள சீதையாக நடிக்க கரீனா கபூரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் படக்குழு. கதையை ஆர்வமாக கேட்ட கரீனா, தனக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என கூறிவிட்டாராம். இது குறித்து ஆலோசனை நடத்திய படக்குழு,” நமக்கு பட்ஜெட் தாங்காதுப்பா , வேற நடிகைய பார்க்கலாம்” என கங்கனாவை அனுகியுள்ளனர். கங்கனா ஏற்கனவே மணிகர்ணிகா என்ற இதிகாச கதையில் நடித்திருப்பதால் , அவர் சீதை கதாபாத்திரத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படத்துக்கு திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத்,  கங்கனா ரணாவத் சீதை வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறி இருக்கிறார்.விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  இந்த தகவலுக்கு பிறகு கங்கனா சிறு வயதில் சீதாவாக நடித்த புகைப்படம் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது



சர்ச்சை நாயகி நடிகை கங்கனா, இவர் தெரிவிக்கும் கருத்துக்களாலேயே ட்விட்டர் நிறுவனம் இவரது கணக்குகளை முடக்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தின் ஸ்டோரி இடுகையில், இந்தியாவை பாரத் என பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்தியா என்பது அடிமை பெயராக உள்ளது. இது பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்த பெயர் . எனவே அதை மாற்றி, நம் நாட்டின் ஆதி பெயரான “பாரதம்” என்பதையே வைக்க வேண்டும். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக  நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம். எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி நாம் இழந்த பெயரை மீட்க வேண்டும் என அரசுக்கே வரலாற்றை நினைவுப்படுத்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.