இசையமைப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பண்முக திறமைக்கொண்டவர் கங்கை அமரன், இளையராஜாவின் தம்பியான இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆன் ஸ்கிரீனில் தோன்ற உள்ளார்.  இறுதியாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஆர்யா சூர்யா படத்தில் நடித்திருந்தார் இது தவிர  இதயம் , கரகாட்டக்காரன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28, போன்ற படங்களிலும் நடித்துள்ளார். எட்டு வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் பெயர் வைக்கப்படாத படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளார் கங்கை அமரன். இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.







av33 படத்தில் கங்கை அமரன் கவுரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் இவரின் காட்சிகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. கங்கை அமரன் தமிழ் சினிமாவின் தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஆதரவாளரும் கூட.  கடந்த 2017  ஆம் ஆண்டு  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட தயாராகவும் இருந்தார். ஆனால் அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில்  அண்ணன் இளையராஜவுடன் இணைந்து இசையமைத்து வந்தார் மேலும் புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜிற்கு குரல் கொடுத்திருந்தார் .1982 ஆம் ஆண்டு வெளியான கோழி கூவுது படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார் அந்த படத்திற்கு கங்கை அமரனின் அண்ணனான இளையராஜா இசையமைக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  அதன் பிறகு இளையராஜா இசையில் கொக்கரக்கோ,பொழுது விடிஞ்சாச்சு,எங்க ஊரு பாட்டுக்காரன,  கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன்,சின்னவர்,கோயில் காளை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் அத்த மக ரத்தினமே என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அந்த படத்திற்கான இசையமைப்பாளராகவும் கங்கை அமரன் கலக்கியிருந்தார்.





அதே போல ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவர் இல்லாத சித்திரங்கள்,வாழ்வே மாயம், ஊர்க்குருவி,  புகைப்படம் போன்ற 18 படங்களுக்கு இசையமைத்துள்ளார். சில சமயங்களில் கங்கை அமரன் இசையமைத்த பாடல்களை இளையராஜாவின் பாடல்கள்தான் என ரசிகர்கள் எண்ணிவிடுவதும் வழக்கமான ஒன்றுதான். 1977 ஆம் ஆண்டு வெளியான  16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற ‘செந்தூர பூவே’ என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் கங்கை அமரன்  அதன் பிறகு நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இறுதியாக இவர் எழுத்தில் மாசு படத்தில்   ‘பூச்சாண்டி’  என்ற பாடல்  இடம்பெற்றிருந்தது. இந்த படத்தை கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். சூர்யாவுடன் அவரின் இரண்டாவது மகனான பிரேம்ஜி நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். அதே போல பூஜைக்கேத்த பூவிது,தெக்குத்தெரு மச்-சானே பக்கம்வர,ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி உள்ளிட்ட சில பாடல்களை முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.