சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ள நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்

அசோகச் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2024ம் ஆண்டு “அமரன்” படம் வெளியானது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த இப்படம் வசூல் சாதனைப் படைத்ததோடு மிகப்பெரிய அளவில் ரசிகர்களையும் கவர்ந்தது. இதனிடையே 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

இதில் சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமியும், சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாரும், சிறந்த படத்தொகுப்பாளராக ஆர். கலைவாணனும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களுடைய மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அமரன் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்தது. இந்த நிலையில் இப்படம் தேசிய விருது வென்ற நிலையில் கமல்ஹாசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

Also Read: National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?

தகுதியான அங்கீகாரம் இது  

இதுதொடர்பாக பேசிய அவர், “சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது தெளிவான இயக்கத்திற்கும் கதை சொல்லும் திறமைக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரம் இதுவாகும். சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்றிருக்கும் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக விருது வென்றிருக்கும் ஆர். கலைவாணனுக்கும் எனது பாராட்டுகள். உங்களது உழைப்பு அமரன் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன். சில நடிப்புகள் விருதுகளையும் தாண்டியவை. அமரன் படத்திற்கு உண்மையான, அழகான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்காவாக நீங்கள் இருவரும் நடித்தது இந்திய சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

அமரன் திரைப்படம் பெறும் ஒவ்வொரு விருதும் அங்கீகாரமும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் என்றென்றும் அழியாமல் மாற்றுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரமான சினிமாக்களை ஆதரித்து வருகிறது. இந்தத் தேசிய விருதுகள், மகிழ்ச்சியையும் பெருமையை மட்டுமல்ல, உண்மையான இந்தியக் கதைகளைத் தரமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் கடமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.

டர்மெரிக் மீடியா தயாரிப்பாளர் மகேந்திரன் பேசும்போது, சில பயணங்கள் திரைப்படமாகத் தொடங்கும். ஆனால் சில பயணங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக மாறும். அமரன் அப்படிப்பட்ட ஒரு பயணம். அமரன் குழுவை நினைத்து மிகவும் நெகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், பெருமையாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.