இந்தி தெரியாது போடாவை அன்றே கணித்தவர் மணிரத்னம் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.


பிரபல யூடியூப் சேனலான கலாட்டா  ‘விக்ரம்’ படத்தின் 50 நாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வரிசையில் அவர் நடித்த படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டு, அதைப் பற்றி பேசுமாறு கேட்கப்பட்டது.


மணிரத்னம் இந்தி பேச மாட்டார்.


அதில்  ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் அழும் காட்சி திரையிடப்பட்டு, அது குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய கமல்,  “மணிரத்னம் இந்தி பேச மாட்டார். அவருக்கு இந்தி தெரியாது. இதற்கும் அவர் மும்பையில்தான் படித்தார்.அது ஒரு வீம்பு. அவர்தான் ஹிந்தி தெரியாது போடாவை அன்றே கணித்தவர் என்று நினைக்கிறேன்” என்று பேசினார். 






முன்னதாக, லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 


படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியிலும் விக்ரம் படம் சக்கைப்போடு போட்டது.


விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், இப்போது வம்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்.






இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும், நேற்றோடு விக்ரம் படம் வெளியாகி 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வசூலிலும் சரி, ரசிகர்களின் மனதையும் சரி இன்னும் வேட்டையாடி கொண்டுதான் இருக்கிறது.