குணா 


சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான படம் குணா. ரோஷினி, ஜனகராஜ், எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினியின் தளபதி படத்துடன் களமிறங்கிய குணா படம் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழித்து குணா படம் இன்று சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படம்தான். 


குணா படத்தை ரெஃபரன்ஸாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தி இருந்த விதம் ரசிகர்களைக் கவர்ந்தது. குணா படம் மட்டுமில்லை இந்தப் படம் உருவான விதம், இதற்காக கமல், சந்தானபாரதி மற்றும் படக்குழுவினரின் உழைப்பு , இளையராஜாவின் இசை என எல்லாவற்றுக்கும் ஒரு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது. பெரிய அளவிலான தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாமல் இப்படியான ஒரு லோக்கேஷனை கண்டுபிடித்து அதில் ஒரு படத்தை எடுப்பதை 1991இல் சாத்தியப்படுத்தியது பெரும் வியக்கத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. குணா படத்துக்கு கடந்த சில மாதங்கள் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். வரும் ஜூன் 21ஆம் தேதி சென்னையில் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


படத்தை கொண்டாடுவார்களா 2கே கிட்ஸ்


சமீபகாலத்தில் திரையரங்குகளில் தொடர்ச்சியாக பிரபல நடிகர்களின் படங்கள் ரீரிலீஸ் ஆகி இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. கில்லி, 3, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான கமர்ஷியல் படங்கள் என்பதால் இந்தப் படங்களுக்கு அதிகம் வரவேற்பும் கிடைத்தது. ஆனால் பெரிதாக திரையரங்கில் ஆரவாரம் செய்து சில்லரை விட்டு எரியும் வகையிலான ஒரு படம் இல்லை குணா. குணா படம் திரையரங்கில் முதல் முறையாக வெளியானபோதும் அந்த படத்தில் கமர்ஷியல் அம்சம் இல்லாதது ஒரு பின்னடைவாக வெகுஜன ரசிகர்களிடம் பார்க்கப்பட்டது.


அந்தப் படத்தை ரசிகர்கள் புரிந்துகொள்வதற்கான சூழல் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழித்து வெளியாகும் இப்படம், இன்றை ரசிகர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படுமா இல்லை மற்ற படங்களைப் போல் இந்தப் படத்துக்கும் கொண்டாட்ட மனநிலையில் திரையரங்கத்திற்கு சென்று கதையில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் விசிலடித்து கடந்துவரப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.