நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாவதாக பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் படம் மீண்டும் உருவாகுமா என்ற கேள்விக்கு நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவும் கமலும்
தமிழ் சினிமாவை கமல் இல்லாமல் நம்மால் பிரித்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சினிமாவில் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்ட நபராக உள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன ஆசிரியர் என பன்முக தன்மை கொண்டவராக திகழும் அவர் பல தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே தமிழ் சினிமா மூலம் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தவர். தனது 71 வயதிலும் சினிமா பற்றிய பல்வேறு தேடல்களையும், ஆராய்ச்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
கனவுப்படம்
இப்படியான நிலையில்1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் கனவு திரைப்படமாக அறிவிக்கப்பட்டது “மருதநாயகம்”. இந்த படத்தை அவரே தயாரித்து, இயக்கி, நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் தொடக்க விழாவில் அப்போதைய இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் பங்கேற்றிருந்தார். இந்த படத்தில் நாசர், விஷ்ணுவர்தன், சத்யராஜ், பசுபதி ஆகியோர் நடிப்பதாக இருந்தது. படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாகவும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது. பல முறை மருதநாயகம் பற்றி கேள்வி எழுப்பும்போதெல்லாம் அந்த படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு தயாரிக்க யாராவது முன்வந்தால் படம் தயாரிக்கப்படும் என கூறியிருந்தார்.
விமர்சனத்திற்குள்ளான நிகழ்ச்சி
இதனிடையே சமீபத்தில் ராஜமௌலி - மகேஷ் பாபு இணைந்த வாரணாசி படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொம்மை காளை மாட்டின் மீது மகேஷ் பாபு அறிமுகமாகி ரசிகர்களிடையே வலம் வந்த வீடியோ ட்ரெண்டானது. ஆனால் பலரும் கமலின் மருதநாயகம் படத்தின் முன்னோட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு எந்தவித கிராஃபிக்ஸ் காட்சிகளும் இல்லாமல் மாட்டின் மீது அமர்ந்து எடுக்கப்பட்ட காட்சி என கூறி கமல்ஹாசனை பாராட்டி தள்ளினர். மேலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் படத்தை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
கமல் கொடுத்த பதில்
இந்த நிலையில், “எனக்கு மருதநாயகம் படத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இன்றைக்கு பல தொழில்நுட்பங்கள் வந்து விட்ட நிலையில் அதுவும் சாத்தியம் என்பது தான் என் நம்பிக்கை” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.