Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் பங்கேற்ர நடிகர் தனுஷ், ரஜினி நடித்த எந்திரன் படத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்ததை பேசும்போது, அதை கேட்டு ரஜினி ரசித்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்காற்றியவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ (Kalaingar 100) விழா ​ சென்னையில் நடைபெற்றது.  


நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த விழா இரவு 11 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர்கள் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, வடிவேலு, நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்தேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமில்லை. நடிப்பில் மிகவும் பொறுமை நிறைந்தவர்” என்று புகழ்ந்து கூறியுள்ளார். தன்னை பற்றி தனுஷ் புகழ்ந்து பேசியதை கீழே அமர்ந்துக் கொண்டு கேட்ட ரஜினி, சிரித்து மகிழ்ந்தார்.  மேடையில் ரஜினியை தனுஷ் பேசுவதும், அதை ரஜினி ரசித்தும் கேட்கும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 





தொடர்ந்து பேசிய தனுஷ், “கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை. ஒரு படத்தின் பூஜையின்போது தான் முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கு வந்திருந்தவர் என்னை, ‘வாங்க மன்மத ராஜா’ எனக் கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது, நெகிழ்ந்துவிட்டேன்” என நினைவுகளை பகிர்ந்தார்.

 

நிகழ்வில் கருணாநிதி பற்றி பேசிய ரஜினி, “சில பேர் அவங்களோட அறிவைக் காமிக்குறதுக்காக பேசுவாங்க. மத்தவங்களுக்கு புரியுதானு யோசிக்க மாட்டாங்க. ஆனா கலைஞர் அறிஞர் சபைல அறிஞராவும் கவிஞர் சபைல கவிஞராவும் பாமரனுக்கு பாமரனாவும் பேசுவாரு.  எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது.பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு. கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான்” என்றார்.