இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “தாய்மைக்காக தயார் ஆவது மிகவும் அழகானது. ஆனால் அது ஒரு குழப்பமான தருணம். ஒரு கணத்தில் எல்லாமே நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போன்று தோன்றும். அடுத்த கணத்தில், நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். உறங்கும் நேரத்தை நீங்கள் எப்படி நிர்வகிக்க போகிறீர்கள் என்பது குறித்த ஆச்சர்யம் உங்களிடம் நிலவும். இந்த நாட்கள், வாரங்கள், மாதங்களில் நமது குழந்தைகளையும், நம்முடன் இருப்பவர்களையும் நேசிக்கிறோம். சில சமயங்களில் மகிழ்ச்சி, சோகம், பதற்றம், இதயத்தை நொருங்க செய்யும் தருணங்கள் அடங்கிய உணர்ச்சிகளை கூட மறந்துவிடுகிறோம். இவைகள்தான் நமது கதையை தனித்துவமாக மாற்றி அவற்றை நமதாக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார். 


 






தொடர்ந்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த காஜல் அகர்வால், கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த, இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இதனிடையே படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா பரவலால் தடைப்பட்ட படப்பிடிப்பு, இயக்குநருக்கும் ஷங்கருக்கும் இடையே நடந்த மோதல் உள்ளிட்ட பிரச்னைகள் இந்தியன் 2 வை தாமதப்படுத்தின. இந்த நிலையில்தான் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அவர் கர்ப்பம் தரித்த நிலையில் அந்தப் படத்தில் இருந்தும் விலகினார்.


கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது கணவர் கெளதம் கிச்சலுவுடன் வசித்து வருகிறார். கர்ப்பம் தரித்த அவர் தனது தற்போதைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதோடு,தனது தங்கை மகனான இஷான் வலேச்சாவுடன் இணைந்து ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், இது காஜல் அகர்வால்தானா முகம் முற்றிவிட்டதே என்றெல்லாம் விமர்சித்திருந்தனர். இதற்கு அவர் நீண்ட விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.


இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், "எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் எனது பணியிடம் என எல்லாவற்றிலும் நான் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை எதிர்கொண்டுள்ளேம். இந்த வேளையில், பாடி ஷேமிங் கிண்டல்கள்/ மீம்கள் எழுவதை ஒன்றும் செய்யமுடியாது. நாம் எப்போதும் அன்பாக இருக்கக் கற்றுக்கொள்வோம், அது கடினமாக இருந்தால், நம் வாழ்க்கையை வாழ்வோம் பிறரையும் வாழவிடுவோம். நான் எதிர்கொண்டதைப் போலவே பாடி ஷேமிங் சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முட்டாள்கள் இதை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.






 


கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிக்கும். இன்னும் பல மாற்றங்களை சந்திக்கும். ஹார்மோன் மாற்றங்களே காரணம். குழந்தை வளரும்போது வயிறு, மார்பகங்கள் பெரிதாகி உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். முகங்களில் பருக்கள் வரலாம். எப்போதும் சோர்வான தோற்றம் வரலாம். பிரசவத்திற்குப் பிறகு முன்பு இருந்த அழகை திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் சிலருக்கு பழைய உருவத்தை திரும்பப் பெற முடியாமலும் போகலாம். இந்த மாற்றங்கள் இயற்கையானவை. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இதைப் பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருக்காதீர்கள். ஸ்ட்ரெஸாகும் போது மிதமான நீச்சல் அல்லது நடைபயிற்சி மனதைத் தெளிவுபடுத்தும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.