பாரதிராஜாவின் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான 'காதல் ஓவியம்' திரைப்படத்தின் ஹீரோவாக அறிமுகமானதுடன், தன் முதல் படத்தோடு சினிமா பயணத்தை நிறுத்திக் கொண்டவர் நடிகர் கண்ணன்.


பெங்காலி படத்தின் ஆடிஷனுக்காக சென்ற கண்ணன் அங்கே ரிஜெக்ட் செய்யப்பட்டதால் மிகவும் வருத்தமான ஒரு மனநிலையில் இருந்த நிலையில், அடுத்தே இரண்டே நிமிடங்களில் கண்ணனுக்கு அடித்தது லக். அது தான் பாரதிராஜாவின் 'காதல் ஓவியம்' படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம். 


 



அடிச்சுது லக்..


கண் தெரியாதவராக நடிகை ராதாவின் ஜோடியாக நடித்தவர் தான் கண்ணன். டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தவர், பாரதிராஜாவின் கண்ணில் பட்டதால் ஆடிஷன் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ராதா உடன் முதல் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்து விடாது. மேலும் படத்தின் பாடல்களும் ஹிட் அடிக்க, பாடகராக நடித்த இவர் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்ந்தார். ஆனால் இந்த ஒரு படத்துடன் திரைத்துறையை விட்டு ஒதுங்கினார்.


இந்நிலையில், பல ஆண்டுகளாக 'காதல் ஓவியம்' கண்ணன் எங்கே என தேடிய ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக, வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கண்ணன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் ஒரே படத்தோடு முடிந்த தனது சினிமா பயணம், வாய்ப்புக்காக அலைந்த அந்தக் காலங்கள் பற்றி பல தகவல்களை மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்திருந்தார்.


 



பாரதிராஜாவுக்கே அட்வைஸ்..


உலகிலேயே மிகவும் பிரபலமான ஒரு இயக்குநரான பாரதிராஜாவின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு லக். நான் நடித்த முதல் ஷாட் கண் தெரியாதவனாக கோயிலில் பூக்களை எடுப்பது போல சுத்தி இருக்கும் ஓசைகளை, ராதாவின் வருகையை கேட்கும் காட்சி. நான் முதலில் நடித்த காட்சி. நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்றால், அது ராஜா ராணி போல வேடமிட்டு தூய தமிழில் பேசுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதற்கு நான் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். நான் ஒரு ஸ்டேஜ் நடிகன். அந்த தைரியத்தில் பாரதிராஜா சாருகே ஒரு காட்சியில் எப்படி ஷாட் எடுக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுத்தேன். 


சான்ஸ் கிடைக்கவில்லை..


சுனில் என்ற என்னுடைய ஒரிஜினல் பெயரை ‘காதல் ஓவியம்’ கண்ணன் என மாற்றியது இயக்குநர் பாரதிராஜா சார். அந்த சமயத்தில் பி.கண்ணன் என்ற கேமரா மேன் ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் அவருடைய பெயரை எனக்கு வைத்தார். இந்தப் படத்தில் நடிப்பியா எனக் கேட்டார்கள். நடிக்கிறேன் என சொன்னேன். அவ்வளவு தான்.. நான் கதை கூட கேட்கவில்லை.


பாரதிராஜா படம் நிச்சயம் வெற்றி பெறும் என நினைத்தேன் ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆனால் மிகவும் அருமையான ஒரு கதை. அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் சினிமா சான்ஸூக்காக அலைந்தேன். ஆனால் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. கே. பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். ஆனால் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 


ஒரு நாள் வில்லன்!


காதல் ஓவியம் திரைப்படம் நடிப்பதற்கு முன்னர் மலையாளத்தில் ஒரு படத்தில் ஒரு நாள் மட்டும் வில்லனாக ராதிகா மேடமுடன் நடித்தேன். ஒரே ஒரு டயலாக் தான். அதைப் பேசிவிட்டு அடிவாங்கி கீழே விழுந்து விடுவேன் அது தான் நான் நடித்த காட்சி.  இப்போது பார்ப்பதற்கு மிகவும் கெத்தாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.


கோலிவுட்டின் ஸ்டைலிஷான அப்பாவாக நடிக்க கச்சிதமான தோற்றத்தில் இருக்கிறார் கண்ணன். வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறாராம்!