தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை ஜோதிகா தற்போது மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து "காதல் தி கோர்" திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 



 


கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் :


திருமணம் முடிந்த பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களான மகளிர் மட்டும், பொன்மகள் வந்தால், காற்றின் மொழி, நாச்சியார், உடன் பிறப்பு போன்ற படங்களின் மூலம் மீண்டும் மாஸ் காட்டினார்.


 


பின்னர் தனது கணவர் சூர்யா உடன் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் பட தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கிய ஜோதிகா தற்போது மீண்டும் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து 'காதல் தி கோர்' திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. நடிகர் மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். நடிகர் மம்மூட்டி நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான " ரோர்ஸ்சாச் " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 


 






.


ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஜோதிகா:


நடிகர் மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி சார்பில் உருவாகும் இந்த மலையாள திரைப்படத்தை இயக்குகிறார் பிரபல இயக்குனர் ஜோ பேபி. இவர் மலையாள திரையுலகில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது நடிகை ஜோதிகா இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மீண்டும் தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்க தயாராகிவிட்டார் ஜோ. இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.