பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் காட்சிகள், படக்குழுவினருடன் தான் பகிர்ந்து கொண்ட தருணங்கள் ஆகியவை அடங்கிய வீடியோ ஒன்றை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் இல்லை என்பன போன்ற கலவையான விமர்சனங்கள் படத்துக்கு வந்தாலும், இவற்றையெல்லாம் தாண்டி படம் வெளியான இரண்டு நாள்களில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களுள் ஒன்றான குந்தவை பாத்திரத்தில் நடித்த த்ரிஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பகிர்ந்து பட ஷூட்டிங் தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.


குந்தவையை தன் வாழ்நாள் பாத்திரங்களுள் ஒன்றாகக் கொண்டாடும் நடிகை த்ரிஷா, “நான் மணி சாரின் குந்தவை அதுவே எனக்கு போதும்” என பல மேடைகளிலும் பல தருணங்களில் தொடர்ந்து கூறிவருகிறார். அரசியாக நடிக்க விரும்பிய த்ரிஷாவின் கனவு இந்தப் படத்தில் நிறைவேறிய நிலையில் உற்சாகமாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினருடன் கலந்துகொண்டு அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார்.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகங்களின் மேக்கிங் வீடியோ ஒன்றை நெகிழ்ச்சியுடன் த்ரிஷா தற்போது பகிர்ந்துள்ளார்.


கொரோனா ஊரடங்கு தொடங்கு இந்தப் படத்துக்கான ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2021, ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி தான் குந்தவையாக சிகை, உடை அலங்காரம் செய்து மாறியது, பிஸியான படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் தொடங்கி சக நட்சத்திரங்களுடன் நேரம் செலவிடுவது எனப் பல  மகிழ்வான தருணங்களையும் த்ரிஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.


 






இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளி வருகிறது.


முன்னதாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


பொன்னியின் செல்வம் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கும் மேல் வசூலை ஈட்டியதாகக் கூறப்பட்டது.


விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி,  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜெயராம், சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு எனப் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.