கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா - 2 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கார்த்திக் சுப்பராஜ் டிவீட்:


இதுதொடர்பாக ஜிகர்தண்டா 2 படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா இருப்பது போன்ற புதிய படத்துடன், நடப்பாண்டு தீபாவளி அதாவது நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, படப்பிடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், படப்பிடிப்பு தீயாய் நடந்து வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக, திரையரங்கு வாசலில் குண்டு வெடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


ஜிகர்தண்டா -2:


விக்ரம் நடிப்பில் ஒடிடியில் வெளியான மகான் திரைப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு எதுவும் நீண்ட நாட்களாகவே வெளியாகாமல் இருந்தது. தொடர்ந்து, ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனாலும் அந்த படம் தொடர்பான வேறு எந்தவித தகவலும் வெளிவரவில்லை.


ஆச்சரியம் தந்த டீசர்:


இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. அதில், படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், டீசரில் மௌவுத்-ஆர்கன்னுடன் சர்ப்ரைஸ் கொடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதன் அடுத்த காட்சியில்  மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். இவர்கள் இருவருக்குமிடையிலான மோதல் தொடரும்போது ராகவா லாரன்ஸ் கையிலெடுக்கும் ஆயுதத்தின் ஆச்சரியத்துடன் நிறைவடைகிறது டீசர்.


இப்படம் கார்த்திக் சுப்புராஜிற்கு உரிய மதுரை கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாவது டீசரின் மூலம் தெரிய வந்தது. ஸ்டோன் பென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஜிகர்தண்டா:


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி, கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். தனது அசாத்திய நடிப்பால் தேசிய விருதை வென்றார் பாபி சிம்ஹா . பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின்,  இரண்டாம் பாகத்தை தான் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி வருகிறார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கலிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.