பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபமாக நடந்த ஒரு பேட்டியில் தனது  மறைந்த தாயார் ஸ்ரீதேவி பற்றி பேசியிருந்தார். முன்னாள் நடிகை ஸ்ரீதேவி அவரின் மகளிடம் திரைப்படத்துறையில் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க தயார் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் சாதித்து தனது அம்மாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே குறிகோளாக வைத்துள்ளதாக ஜான்வி பேசினார்.


தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழின் உச்சியை தொட்டவர் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை 1996-ல் மணந்தார். இருவருக்கும் ஜான்வி, குஷி என இரு மகள்கள் பிறந்தனர். ஸ்ரீ தேவி 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் துரதிர்ஷ்டவசமாக காலமானார் என்பது குறிப்பிடதக்கது.


பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி , தனது அம்மாவாகிய ஸ்ரீதேவி கூறிய சில விஷயங்களை பகிர்ந்தார். ஜான்வியிடம் ஸ்ரீதேவி கூறியதாவது, "எனது சினிமா வாழ்க்கை எனக்கு சுலபமாக அமையவில்லை, அடிக்கடி உன்னை சிலர் காயப்படுத்தலாம்.  சினிமா துறையில் நடிக்க, உன்னை நீயே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். என்னை போல் நீயும் கஷ்டபட வேண்டாம் அதை நான் விரும்பவும் இல்லை. மக்கள் நான் நடித்த 300வது படத்தையும் உன் முதல் படத்தையும் ஒப்பிடுவார்கள். இதையெல்லாம் நீ எப்படி சமாளிப்பாய்?" என கேள்வி எழுப்பினார். 






இதையடுத்து பேசிய ஜான்வி "சினிமா வாழ்கை முட்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் நான் சினிமாவில் நடிக்காவிட்டால் எதையோ இழந்ததை போல் என் வாழ்க்கை சோகத்தில் ஆழ்ந்துவிடும். எனது முதல் நான்கு படங்களையும், அம்மா நடித்த 300 படங்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டாலும் பரவாயில்லை. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் நான் என் அம்மாவின் பெயரை காப்பாற்றவும் அவரை பெருமைபடுத்தவும் நான் நிச்சயம் சாதிப்பேன்." என்று கூறினார்.