முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக முதல் முறையாக விரிவாக பேசியுள்ள படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ், அந்த சம்பவம் குறித்து தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.
ஜனநாயகன் கசிவு குறித்து பிரதீப் இ. ராகவ்
படம் கசிந்த விவகாரம் குறித்து பேசிய பிரதீப் இ. ராகவ், " ஆப்பிரிக்காவில் போர் எறும்புகள் என்று ஒரு எறும்பு வகை உண்டு. அவை மொத்தமாக சேர்ந்து ஒரு பெரிய விலங்கை கூட கொன்று தின்றுவிடும். இந்த படத்தை வெளியிட்டவர்கள் அந்த மாதிரியானவர்கள். படத்தை வெளியிட்டவர்கள் தற்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்றோ படத்தை பார்த்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்றோ யாருக்கும் தெரியவில்லை. " என்று கூறினார்ல்.
ஆயிரம் பேரின் உழைப்பு
தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் படத்துக்காக ஆயிரம் பேர் உழைத்திருக்கிறார்கள். அந்தப் படம் எங்களுக்கு சோறு போட்ட படம். படம் கசிந்த பிறகு எங்கள் குழுவில் வேலை செய்த பலரும் அழுதார்கள். லீக் செய்த முக்கிய நபர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துவிட்டார்கள். ஆனால் அதை சமூக வலைதளங்களில் பரப்பியவர்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனியாக எந்தச் சட்டமும் இல்லை. அது எனக்கு மிகவும் வேதனையான விஷயமாக இருந்தது" என்று கூறினார்.
பைரசியை தடுக்க
பைரசியை கட்டுப்படுத்த தொழில்நுட்ப தீர்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். YouTube-ல் காப்புரிமை பெற்ற வீடியோவை வேறு ஒருவர் பதிவேற்ற முயன்றாலே தானாகத் தடுக்கப்படும் வசதி இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்ற தொழில்நுட்பம் Instagram, X உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வந்தால் திரைப்பட பைரசியை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
மேலும், "படம் இணையத்தில் வந்த பிறகு அதன் பரவலைக் குறைக்க முடியும். ஆனால் அது பதிவேற்றப்படுவதையே தடுக்க முடியவில்லை. அது வைரஸ் பரவுவது போன்றது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் பைரசி தொடர்பாக இணைய இணைப்பை முடக்குவது, அபராதம் விதிப்பது, நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது போன்ற கடுமையான சட்டங்கள் இருப்பதாக கூறிய பிரதீப், இந்தியாவிலும் இதுபோன்ற நடைமுறைகள் வர வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பேட்டியின் இறுதியில், "படம் ஓடவில்லை என்றால் அடுத்த படம் கிடைக்காதோ என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை. இன்று நான் ஒரு எடிட்டராக மட்டுமல்ல, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறேன். அந்தப் பொறுப்புதான் என்னை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பிரதீப் இ. ராகவ் கூறினார்.
