உலகம் முழுவதும் 2 பில்லியன் டாலர்களைக் கடந்த மூன்று படங்களை இயக்கிய ஒரே நபர் எனும் சாதனையை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படைத்துள்ளார்.


கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கனவுப்படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ’தி வே ஆஃப் வாட்டர்’  உலகம் முழுதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது. 


கடந்த 2009 ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகமான அவதார் தொழில்நுட்பத்தில் மிரட்டி உலக அளவில் சக்கைபோடு போட்டு வசூல் வேட்டை நடத்தியது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளையும் வென்றது.


அதனைத் தொடர்ந்து இன்னும் மிக பிரம்மாண்டமாய், பெரும் பொருட்செலவு, தொழில்நுட்ப வசதிகள் என அதிக காலம் எடுத்து அடுத்த தளத்துக்கு படத்தை எடுத்துச் சென்று சுமார் 13 ஆண்டுகள் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் பார்த்து பார்த்து செதுக்கி வந்தனர்.


இந்நிலையில், டிசம்பர் 16 வெளியான ’தி வே ஆஃப் வாட்டர்’ முதல் வாரத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.




 


முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பண்டோரா உலகின் மக்களுக்கு தன்னால் ஆபத்து நேருகிறது என்பதை அறியும் ஹீரோ ஜேக் சல்லி, குடும்பத்தினரோடு கடல்வாசிகள் வாழும் பண்டோரா உலகத்தில் தஞ்சமடைகிறார். அவரை வில்லனான கர்னல்  எப்படி பழிவாங்க முற்படுகிறார் என்பதே 2 ஆம் பாகத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.


முன்னதாக அவதார் 2 குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்கள் (16,400 கோடி ரூபாய்!) வசூலித்தால் தான் நஷ்டம் ஏற்படாமல் தப்பித்து படத்துக்கான செலவை ஈடுகட்ட முடியும் என இயக்குநர் ஜேம்ஸ் காமரூன் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், அவரது நம்பிக்கையை மெய்யாக்கும் வகையில், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போடத் தொடங்கிய ‘அவதார் த வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் நேற்றுடன் (ஜன.22) உலகம் முழுவதும் 2 பில்லியன் டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட 16,500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது.


இதேபோல் முன்னதாக ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் 2.9 பில்லியன் டாலர்களும், 1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் 2.19 பில்லியன் டாலர்களும் ஈட்டி சாதனை படைத்தன.


இந்நிலையில் உலகிலேயே 2 பில்லியன் டாலர்கள் வசூலை வாரிக்குவித்த 3 படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் எனும் சாதனையை ஜேம்ஸ் காமரூன் படைத்துள்ளார்.


வரும் ஆண்டுகளில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை ஜேம்ஸ் காமரூன் இயக்கவுள்ளார். அதன்படி அவதார் மூன்றாம் பாகத்தில் புதுவித நாவி மக்களை காட்ட உள்ளதாகவும், அவதார் கிரகத்துக்கு செல்லும் ஏலியன்களான மனிதர்களை மட்டுமே வில்லன்களாக சித்தரிக்காமல், அவதார் கிரக வாசிகளான நாவி இனக்குழு மக்களையும் காண்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கெனவே அவதார் முதல் பாகத்தில் வனத்தில் வாழும் ’ஒமேட்டிகாயா’ மக்கள், இரண்டாம் பாகத்தில் நீர்வாழ் நாவி மக்களான 'மெட்கயினா’ இன மக்கள் ஆகியோரை சுற்றி கதை வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.