ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.


ஜெயிலர்:


பெரும் எதிர்பார்ப்புகளிடையே நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர்  திரைப்படம் உருவாகி வருகிறது. கோலிவுட் தொடங்கி பல மொழி உச்ச நட்சத்திரங்கள் வரை அனைவரையும் இணைத்து மல்டி ஸ்டாரர் படமான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். 


ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ள நிலையில், அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


ஆகஸ்ட் 10 ரிலீஸ்:


சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி வரும் வார விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும் முன்னதாக இதுகுறித்த ரிலீஸ் டேட் அனவுன்ஸ்மெண்ட்  வீடியோவும், நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர்களும் பகிரப்பட்டு இணையத்தில் ஹிட் அடித்தன.


இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் அடுத்த மாதம் ரிலீசாகும் என்றும் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.


அமிதாப்பச்சன்:


மேலும், ஏற்கெனவே ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட் தாண்டி அனைத்து தென்னிந்திய உச்ச நட்சத்திரங்களையும் இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள நெல்சன், தற்போது இந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்து வரவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


அதன்படி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாராட்டு விழா, மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் பட இசை வெளியீட்டு விழா ஆகியவற்றில் முன்னதாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் கலந்துகொண்ட நிலையில், இந்த விழாக்களி வர்சையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிலும் அமிதாப் பச்சன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


70கள் தொடங்கியே சிறந்த நண்பர்களாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஹம், அந்த கனூன் உள்ளிட்ட சில திரைப்படங்ளில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜெயிலர் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் பகுதி காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: "எளிதில் கடந்து போக முடியாது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' .. எங்கள் மக்களின் வலி.." விஜய் சேதுபதி படத்தை பார்த்து கண்கலங்கிய சீமான்..!