லட்சுமியாக மாறிய அக்னி கலச காலண்டர் - ஜெய் பீமில் திடீர் மாற்றம்!

அக்னி கலசத்துக்கு பதிலாக கடவுள் லட்சுமியின் காலண்டர் மாற்றப்பட்டுள்ளது.

Continues below advertisement

சூர்யா நடித்து தயாரித்திருக்கும் படம் ஜெய் பீம். இருளர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை காவல் துறையினர் லாக்கப்பில் வைத்து கொலை செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் வெளிவரவில்லை. படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிளம்பிய நிலையில் வன்னியர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் காட்டப்பட்ட சில குறியீடுகள் வன்னியர் சமூகத்தை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் காட்டப்பட்ட ஒரு காட்சியில் வில்லன் போலீஸ் வீட்டில் அக்னி கசலம் பொறிக்கப்பட்ட காலண்டர் இருக்கும். இதனை தற்போது படக்குழு மாற்றியுள்ளது. அக்னி கலசத்துக்கு பதிலாக கடவுள் லட்சுமியின் காலண்டர் மாற்றப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்னதாக, ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக படக்குழு அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், காவல் அதிகாரியின் பெயரை அனைத்துக் காட்சிகளிலும் மாற்ற வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இருளர் சமுதாயத்து அப்பாவி இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்டதையும், அந்த இளைஞரின் மனைவி போராடி நீதி பெற்றதையும் அடிப்படையாக வைத்து 'ஜெய்பீம்' என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவது தான் இந்தத் திரைப்படத்தின் நோக்கம் என்று படக்குழு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. நல்லது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதற்கானது என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒரு திரைப்படம், உண்மைகளை மறைத்து பொய்களைக் கட்டமைக்க முயன்றிருப்பதும், தங்களின் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிக் கொள்வதற்காக, நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட முயன்றிருப்பதும், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தியிருப்பதும் அருவருக்கத் தக்கவை ஆகும். திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்திற்கும், திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. 


அவை திரைப்படக் குழுவினரின் முகத்திரையைக் கிழித்து அகத்திரையையும், அதில் படிந்து கிடக்கும் அழுக்கு - சகதிகளையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட, அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலை நிறுத்துவதற்காகத் தான் படக்குழு பாடுபட்டிருக்கிறது. அழுக்கு மனதுடனும், வடிகட்டிய வன்மத்துடனும் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞளை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொடுமைப்படுத்தி படுகொலை செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளரை வன்னியர் என்று காட்டும் நோக்கத்துடன் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் நாட்காட்டி இருப்பது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola