Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அரசியல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பார்த்து தூக்கம் வரவில்லை என பாராட்டினார்.






படத்தில் சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்தார் சூர்யா. ஒவ்வொரு சீனிலும் சூர்யா பேசும் அழுத்தமான வசனங்கள் பார்ப்பவருக்கும் மெய் சிலிர்ப்பை உண்டாக்கும். ஒரு பக்கம் பாராட்டு குவிந்ததாலும் விமர்சனத்துக்கும் பஞ்சம் இல்லாமல் சர்ச்சையில் சிக்கியது படம்.  


படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் அக்னி கலசம் வைக்கப்பட்டதும் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.  குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து இந்தக்காட்சிகள் வைக்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன. படக்குழுவுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. போராட்டங்கள் சில நடத்தப்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை விடுத்த படத்தில் இயக்குநர் ஞானவேல்  அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 


இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின்னர் சர்ச்சைகள் அடங்கியது.


இந்நிலையில் படம் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களையும் சென்று சேர்ந்து வருகிறது. ஜெய்பீம் படத்தை நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் வட இந்தியாவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது அதற்கு ஒரு உதாரணம். இப்போது திரைப்பட கவுரவமாக பார்க்கப்படும் ஆஸ்கர் கம்யூனிட்டி ஜெய்பீமை கவுரவம் செய்தது. இது மட்டுமன்றி, ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான வீடியோவும் பதிவேற்றம செய்யப்பட்டது.  


இதனிடையே, ஜெய்பீம் திரைப்படம்  படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.   


வென்ற விருதுகளின் விவரம்:-


சிறந்த படம் - ஜெய்பீம் 


சிறந்த நடிகர் - சூர்யா 


சிறந்த நடிகை -  லிஜோமோல் ஜோஸ்


இன்று நடைபெற்ற 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில், 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் திரைப்படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.