சுகேஷ் சந்திரேசகர், இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அப்படி மறந்தும் மறந்தவர்களுக்கு நினைவுப்படுத்த இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பாலிவுட் பிரபல நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் ஆப்பிள் கன்னங்களில் முத்தமிட்ட படி சுகேஷ் சந்திரசேகர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி, பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.


யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் இரும்புக் கோட்டை என்று அழைத்துவந்த அதிமுக ஆட்டம் கண்டிருந்த காலம் அது. அப்போது  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக போட்டாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.


200 கோடி அபகரிப்பு:


சிறையில் இருந்து கொண்டும் கூட சுகேஷ் சும்மா இல்லை. ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்டார். அவரது அப்போதைய காதலி, லீனா மரியா மூலம் இந்த அபர்கரிப்பில் ஈடுபட்டார்.


மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவியான அதிதி சிங் அளித்த புகாரில், தனது கணவரான ஷிவிந்தர் மோகன் சிங்கை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவுவதாகவும், அதற்காக ரூ. 200 கோடி தன்னிடம் பெற்றதாகவும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனது காதலியான லீனா மரியா பால் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் லீனா மரியா பால் மற்றும் சுகேஷின் உதவியாளர்களான கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.




இந்நிலையில், இடைக்கால ஜாமீனில் வெளியில் சுகேஷ் சந்திரசேகர் தற்போது பாலிவுட் பிரபலம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்டிக்கா ஒரு ஃபோட்டோ எடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுவும் அந்த செல்ஃபியில் தெரியும் ஐஃபோன் 12 ப்ரோ, அமலாக்கத் துறையினர் விசாரணையின் போது கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்திய ஃபோன் என்பது கூடுதல் தகவல். அந்த ஃபோனில் சுகேஷ் இஸ்ரேல் நாட்டில் பெறப்பட்ட சிம்மைப் பயன்படுத்தி வந்தார்.


அண்மையில் ஜாக்குலின், சுகேஷ் காதல் பற்றி கிசுகிசு செய்திகள் வெளியாக அதனை ஜாக்குலின் திட்டவட்டமாக மறுத்துவந்தார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் சினேகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி  பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் ஜாக்குலின் ஃபெர்னாண்டாஸும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.