மீடூ


மீடூ இயக்கம் அல்லது நானும் பாதிக்கப்பட்டேன் (#MeToo movement) எனும் இயக்கம் உலக அளவில், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களை ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் முறையே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.


சமுக வலைதளங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களைப் பகிர்வோர் #MeToo என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிட்டனர். ஹாலிவுட்டில், 2017 இல் நடிகை அலிஸ்சா மிலனோ முதன்முதலில் ட்விட்டரில் #Me Too குறியிட்டு, நடிகர் ஹார்வி வெயின்ஸ்டீனால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.


2018ல், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகரும், இயக்குநருமான நானா படேகரால் பணியிடத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து ட்விட்டரில் வெளியிட்டார். இதன் மூலம் மீடூ இயக்கம் இந்தியாவிலும் அறிமுகமானது. அதற்குப் பின்னர் கோலிவுட்டிலும் பலரும் சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான விஷயங்களை தைரியமாக பொதுவெளிகளில் பகிர்ந்தனர். இந்நிலையில் பிரபல நடிகையான இஷா கோபிகரும் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தான் சினிமாவில் அட்ஜஸ்ட் செய்யாததால் பல வாய்ப்புகளை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 






இஷா கோபிகர்


என் சுவாச காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சினிமாத்துறையில் இருக்கும் Casting couch குறித்து பேசியுள்ள இஷா கோபிகர், ''


“சினிமாவில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்யக்கோரி வற்புறுத்தும் நிலைமை உள்ளது. ஒரு படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது, பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கதாநாயகன் பெயரைச் சொல்லி அவருடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என தெரிவித்தார். நான் அந்த நடிகருக்கே போன் செய்தேன். அவர் என்னை தனியாக சந்திக்கும்படி கூறினார். நான் மறுத்துவிட்டேன். உடனடியாக தயாரிப்பாளரிடம் சென்று, நான் நடிக்கவே வந்திருக்கிறேன். நடிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் சமரசம் இல்லை என கறாராக தெரிவித்துவிட்டேன். உடனடியாக அந்தப்படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். இப்படி பல இடங்களில் அட்ஜெஸ்ட் செய்யாமல் நான் இருந்ததால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.